வணிகம்
மீண்டும் டுவிட்டரில் வேலைநீக்க நடவடிக்கை.. கொடுத்த வாக்கை காப்பாற்றாத எலான் மஸ்க்!
உலகின் முன்னணி தொழில் அதிபர்களில் ஒருவரான எலான் மஸ்க் கடந்த சில மாதங்களுக்கு முன்னர் டுவிட்டரை 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கிய நிலையில் அதிரடியாக சுமார் 50% ஊழியர்களை வேலை நீக்கம் செய்தார். வேலை நீக்க நடவடிக்கைக்கு பின்னர் அவர் இனிமேல் வேலை நீக்க நடவடிக்கை இருக்காது என்று அவர் ஊழியர்களிடம் உறுதி அளித்த நிலையில் தற்போது மீண்டும் வேலைக்கு நடவடிக்கையை எடுக்கப் போவதாக எலான் மஸ்க் தரப்பினார் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
உலகின் முன்னணி சமூக வலைதளமான ட்விட்டரை எலான் மஸ்க் வாங்கிய பிறகு அந்நிறுவனத்தின் சிஇஓ உள்பட பலரை அதிரடியாக வேலை நீக்கம் செய்தார். சுமார் 50% ஊழியர்கள் வேலை நீக்கம் செய்யப்பட்டதாக தகவல்கள் வெளியாகின. தற்போது ட்விட்டர் ஊழியர்களில் சுமார் 2000 பேர்கள் மட்டுமே இருக்கும் நிலையில் அவர்களில் 50 ஊழியர்களை மீண்டும் வேலை நீக்கம் செய்யப் போவதாக எலான் மஸ்க் தெரிவித்திருப்பது ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ட்விட்டர் நிறுவனம் கடந்த சில மாதங்களாக விளம்பர வருவாய் குறைந்து விட்டதன் காரணமாக இந்த வேலை நீக்க நடவடிக்கை எடுக்கப் போவதாக இன்சைடர் என்ற செய்தி தளம் தெரிவித்துள்ளது. இதனால் ட்விட்டர் நிறுவனத்தின் ஊழியர்களின் மொத்த எண்ணிக்கை 2000க்கும் குறையலாம் என அறிக்கை ஒன்று கூறுகிறது.
இது குறித்த கேள்விகளுக்கு டுவிட்டர் நிறுவனம் உடனடியாக பதில் அளிக்கவில்லை என்றாலும் அங்குள்ள முக்கிய அதிகாரிகள் இன்னும் வேலை நீக்க நடவடிக்கை இருக்கலாம் என்று தெரிவித்தது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. ஏற்கனவே பல்வேறு நிறுவனங்கள் தொடர்ச்சியாக வேலைநீக்கம் நடவடிக்கையை எடுத்து வருகின்றன என்பதும் அமேசான் உள்பட பல நிறுவனங்களில் பணிபுரிந்த ஊழியர்கள் வேலையிழந்து கஷ்டப்பட்டு கொண்டு இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் ட்விட்டரில் தற்போது பணிபுரியும் ஊழியர்கள் மன அழுத்தத்துடன் பணிபுரிவதாகவும் நீண்ட நேரம் மற்றும் டார்கெட் உள்பட பல்வேறு சிக்கல்கள் அவர்கள் இருக்கும் நிலையில் தற்போது பணி நீக்க நடவடிக்கையும் எடுக்கப்பட இருப்பதால் ஊழியர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் தான் கொடுத்த வாக்கை எலான் மஸ்க் காப்பாற்ற வேண்டும் என்றும் இனிமேல் வேலை நீக்க நடவடிக்கை இருக்காது என்ற வார்த்தையை அவர் உறுதி செய்ய வேண்டும் என்றும் ட்விட்டர் நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில் ட்விட்டர் நிறுவனம் ஒரு சில பயனாளிகளுக்கு கட்டண சேவையாக மாற்றிவிட்டதை அடுத்து ஓரளவு வருமானம் அதிகரித்தாலும், விளம்பதாரர்கள் அதிகம் வெளியேறிவிட்டதால் ட்விட்டரின் வருமானம் பெரும் வீழ்ச்சி அடைந்துள்ளதாக கூறப்படுகிறது. நான்காவது காலாண்டில் ட்விட்டரின் வருமானம் சுமார் 35 சதவீதம் சரிந்துள்ளதாகவும் தற்போது ஒரு பில்லியன் மட்டுமே நிறுவனத்தின் வருமானமாக இருப்பதாகவும் டுவிட்டர் உயர்மட்ட அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஆனால் அதே நேரத்தில் ட்விட்டரின் வருமானத்தை பெருக்குவது எப்படி? என்பது குறித்து ஆலோசனை செய்ய வேண்டுமே தவிர சிக்கன நடவடிக்கை என்ற பெயரில் ஊழியர்களை குறைப்பதால் எந்த விதமான பயனும் இருக்காது என்றும் வேலை இருக்குமா? இருக்காதா? என்ற மன அழுத்தத்துடன் ஊழியர்கள் வேலை பார்த்தால் அந்நிறுவனத்தின் வளர்ச்சி தடைபடும் என்றும் பொருளாதார அறிஞர்கள் கூறி வருகின்றனர்.
வருவாயை பெருக்க மேலும் பல புதிய வழிகளை கண்டுபிடித்து வருமானத்தை பெருக்குவதற்கான நடவடிக்கையை எடுக்க வேண்டுமே தவிர ஊழியர்களை குறைக்கும் நடவடிக்கையை எடுக்கக் கூடாது என்றே அனைவரதும் கருத்தாக உள்ளது.