இந்தியா

5 நாட்களில் 9 லட்சம் பயனர்கள்; ட்விட்டருக்கு மாற்றாக வந்த Koo செயலிக்கு அடித்த ஜாக்பாட்

Published

on

ட்விட்டர் சமூக வலைதளத்திற்கு மாற்றாக வந்துள்ள ‘கூ’ செயலி, 5 நாட்களில் 9 லட்சம் புதிய பயனர்களைப் பெற்றுள்ளது. கூ செயலியின் ரீச் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

ட்விட்டர் சமூக வலைதளத்துக்கு மாற்றாக வந்துள்ள இன்னொரு தளம் தான் ‘கூ’ செயலி. இந்தியாவிலேயே உருவாக்கப்பட்ட இந்த தளத்திற்கு மத்திய அரசு மற்றும் பாஜகவைச் சேர்ந்த பலர் ஆதரவு கொடுத்துள்ளனர். இந்த செயலி ‘ஆத்மநிர்பார் பாரத்’ என்னும் பிரதமர் மோடி வலியுறுத்தும் ‘சுயசார்பு இந்தியா’ திட்டத்திற்கு வலு சேர்ப்பதாக வலதுசாரிகள் கூறி வருகின்றனர். ‘ஆத்மநிர்பார் பாரத் செயலி போட்டியிலும்’ இந்த செயலி முதல் பரிசு பெற்றது குறிப்பிடத்தக்கது. ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் மொபைல் போன்களில் இந்த செயலியைத் தரவிறக்கம் செய்து பயன்படுத்த முடியும். இதற்கென்று தனியாக ஒரு இணையதள பக்கமும் உருவாக்கப்பட்டுள்ளது. ஆகவே ட்விட்டருக்கு அனைத்து வகைகளிலும் இந்த செயலி மாற்றாக இருக்கும் எனப்படுகிறது. சமீக காலமாக ட்விட்டர் நிறுவனத்துக்கும் மத்திய அரசுக்கும் உரசல் போக்கு நிலவி வருகிறது.

மத்திய அரசுத் தரப்பு, டெல்லியில் நடந்து வரும் விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவாக கருத்துக் கூறி வருபவர்களை அதன் தளத்தில் இருந்து நீக்க வேண்டும் என்று ட்விட்டர் நிறுவனத்திடம் வலியுறுத்தி வருகிறது. அதற்கு இதுவரை அடிபணியாமல் இருந்து வருகிறது ட்விட்டர். இதையொட்டித் தான் வலதுசாரிகள், கூ செயலியைப் பயன்படுத்தப் பிரச்சாரம் செய்து வருகின்றனர். இப்படி கூ செயலிக்கு ஆதரவுக் குரல்கள் அதிகரித்து வந்தாலும் அதில் தகவல் கசிவு இருப்பதாகவும், பாதுகாப்புக் குறைபாடு இருப்பதாகவும் பரபரப்புக் குற்றச்சாட்டு சொல்லப்படுகிறது.

கண்டுபிடித்து ஓராண்டே ஆகும் கூ செயலிக்கு, கடந்த ஆண்டு வெறும் 26 லட்சம் பயனர்களே இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. அதே நேரத்தில் சென்ற ஆண்டு ட்விட்டரில் மட்டும் புதிதாக 2.8 கோடி பயனர்கள் வந்தனர். இப்படியான சூழலில் தான் கடந்த பிப்ரவரி 6 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரை, கூ செயலியில் 9,01,000 புதிய பயனர்கள் உள்ளே வந்திருக்கிறார்களாம்.

Trending

Exit mobile version