தமிழ்நாடு
எடப்பாடி பழனிசாமி கூறியது அப்பட்டமான பொய்: காங்கிரஸுக்கு தினகரன் ஆதரவு!
மேகதாட்டு அணை கட்டப்படும் எனவும், காவிரி மேலாண்மை வாரியம் கலைக்கப்படும் என ராகுல் காந்தி கூறியதாக தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி பேசியது அப்பட்டமான பொய் என டிடிவி தினகரன் கூறியுள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் தமிழகத்தில் நிலவும் குடிநீர் பிரச்சனை தொடர்பாக பேசிய காங்கிரஸ் சட்டமன்றக் குழு தலைவர் கே.ஆர்.ராமசாமிக்கு பதில் அளித்த தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, தேர்தல் பிரச்சாரத்தின் போது கர்நாடகாவில் பேசிய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மேகதாட்டு அணை கட்டப்படும் எனவும், காவிரி மேலாண்மை ஆணையம் கலைக்கப்படும் என்றும் கூறியுள்ளார். இதுகுறித்து நீங்கள் கேள்வி எழுப்பி இருக்கிறீர்களா? என பேசினார்.
இதற்கு தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி அறிக்கை மூலமாக எடப்பாடி பழனிசாமிக்கு காட்டமாக பதிலளித்துள்ளார். அதில், ராகுல் பேசியதற்கான ஆதாரத்தை முதல்வர் வெளியிட வேண்டும் என்று வலியுறுத்தினார். இதனையடுத்து இதுதொடர்பாக சட்டமன்றத்தில் பேச காங்கிரஸ் கட்சியினருக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், நேற்று சட்டமன்றத்தில் காங்கிரஸ் உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.
இந்நிலையில் பெங்களூரில் நேற்று செய்தியாளர்களை சந்தித்த டிடிவி தினகரனிடம் இது தொடர்பாக கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில் அளித்த தினகரன், முதல்வர் கூறியது அப்பட்டமான பொய். இதுகுறித்த செய்திகளை நான் தொலைக்காட்சிகளில் பார்த்தேன். ராகுல் காந்தி அவ்வாறு பேசவில்லை. கர்நாடக நீர்வளத் துறை அமைச்சர் சிவக்குமார், ராகுல் காந்தி இருந்த மேடையில் மேகதாட்டு அணையைக் கட்டுவோம் என பேசியிருக்கலாம். சட்டமன்றத்தில் இதனை காங்கிரஸ் எம்எல்ஏக்கள் எதிர்த்தார்களா என்று தெரியவில்லை.
இதுகுறித்து தேர்தல் சமயத்திலேயே நான், ராகுல் இருக்கும் மேடையிலேயே ஒரு அமைச்சர் இவ்வாறு கூறுகிறார். இதற்கு ராகுல் ஒரு பதிலும் சொல்லவில்லை என்று கூறியிருக்கிறேன். முதல்வர் சட்டமன்றத்தில் தவறான தகவல்களை பதிவு செய்கிறார் என்பது உண்மை. முதல்வர் என்பதாலேயே அவர் சட்ட மன்றத்தில் தவறான கருத்துக்களை பதிவு செய்யக்கூடாது என காங்கிரஸுக்கு ஆதரவாக பேசினார்.