தமிழ்நாடு
அடிமை ஆட்சியை அகற்ற குக்கருக்கு வாக்களியுங்கள்: தினகரன் அதிரடி பிரச்சாரம்!
தமிழகத்தில் தற்போது எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அதிமுக அரசு ஆட்சி செய்து வருகிறது. இதனை அடிமை ஆட்சி எனவும் அதனை அகற்ற குக்கருக்கு வாக்களிக்க வேண்டும் எனவும் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
அம்மா மக்கள் முன்னேற்றக்கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது மக்கள் சந்திப்பு புரட்சி பயணத்தை நேற்று வேளாங்கண்ணியில் தொடங்கினார். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இந்த பயணத்தில் பேசிய டிடிவி தினகரன், நாகை மாவட்டத்திற்கு இதுவரை மேட்டூர் அணை திறக்கப்பட்டு இரண்டு மாதங்களாகியும், காவிரி நீர் இதுவரை கடைமடைக்கு சரிவர வந்து சேராதது குறித்து பேசினார்.
தண்ணீரை நம்பி விதைக்கப்பட்ட பயிர்களும், நடவு செய்த பயிர்களும் கருகிவருவதை பார்த்து இரண்டு விவசாயிகள் தற்கொலை செய்துகொண்டுளனர். வேதனை அளிக்கக்கூடிய இந்த விவசாயிகளின் உயிரிழப்புக்கு வாய்க்கால்களை முறையாக தூர்வாராததும், தூர்வாரியதாக பணத்தை அதிமுகவினரும், அதிகாரிகளும் தங்களின் பையில் போட்டுகொண்டதே காரணம் என்றார்.
மேலும், தமிழகத்தில் மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்றால் வருகின்ற சட்டமன்ற, நாடாளுமன்ற தேர்தலில் குக்கர் சின்னத்திற்கு வாக்களித்து இந்த அடிமை ஆட்சியை அகற்றவும், இரட்டை இல்லை சின்னைத்தை மீட்கவும் அனைவரும் தாயராக இருக்கவேண்டும் என்றார் டிடிவி தினகரன்.