தமிழ்நாடு
ஹெலிகாப்டரிலேயே பிறந்து வளர்ந்தவர்: டிடிவி தினகரன் ஆவேசம்!
தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி கஜா புயலினால் பாதிக்கப்பட்ட பகுதிகளை நேற்று ஹெலிகாப்டர் மூலமாக பார்வையிட்டார். ஆனால் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சென்று சந்திக்காமல் வெறும் இரண்டு இடங்களில் மட்டும் தேர்ந்தெடுத்த சிலரை சந்தித்து விட்டு பயணத்தை பாதியிலேயே முடித்துவிட்டு கிளம்பிவிட்டார்.
பொதுவாக வெள்ளத்தால் பாதிக்கப்பட்டால் மட்டுமே நடந்து செல்ல முடியாத காரணத்தால் ஹெலிகாப்டரில் சென்று தலைவர்கள் பார்வையிடுவார்கள். புயலால் பாதிக்கப்பட்ட மக்களை நேரடியாக சென்று பார்வையிடலாம். ஆனால் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி ஹெலிகாப்டரில் சென்று பார்வையிட்டுவிட்டு மக்களை சரியாக சந்திக்காமல் சென்றுவிட்டார்.
இதனை அமமுக துணைப் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கடுமையாக விமர்சித்துள்ளார். இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், 19, 20, 21 ஆகிய தேதிகளில் டெல்டா பகுதிகளில் மழை இருக்கும் என்று வானிலை ஆய்வு மையம் ஏற்கனவே கூறியிருந்தது. ஆனால் ஹெலிகாப்டரிலேயே பிறந்துவளர்ந்ததுபோல வந்துசென்றுள்ளனர்.
சாலை வழியாகச் சென்று மக்களையெல்லாம் பார்க்க வேண்டும் இல்லையா? உணவில்லாமல், மாற்றுத் துணியில்லாமல் அனைவரும் சாலையில் நிற்கிறார்கள். முகாம் என்ற பெயரில் மக்களை ஆடு, மாடு போல அடைத்துவைத்துள்ளனர். விவசாயம், மீனவர்கள் வாழ்வாதாரம் முற்றிலும் அழிந்துபோயுள்ளது. ஹெலிகாப்டரில்தான் வந்துபார்க்க வேண்டுமா? மக்களை சந்திக்க முடியாத பயத்தில்தான் ஹெலிகாப்டரில் வந்து புதுக்கோட்டையில் ஒரு இடம், தஞ்சையில் ஓரிடத்தில் பார்த்துவிட்டுச் சென்றுள்ளனர் என கடுமையாக விமர்சித்துள்ளார்.