தமிழ்நாடு
70 வயதில் வெளியே வந்து மீண்டும் பாஜகவை எதிர்ப்பேன்: தெறிக்கவிடும் தினகரன்!
மே 19-ஆம் தேதி அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், சூலூர், ஒட்டபிடாரம் ஆகிய நான்கு தொகுதிகளுக்கும் சட்டசபை இடைத்தேர்தல் நடைபெற உள்ளதை அடுத்து அந்த தொகுதிகள் அரசியல் கட்சியினரால் விழாக்கோலம் பூண்டுள்ளது. முக்கிய அரசியல் தலைவர்கள் அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த தொகுதிகளில், அதிமுக, திமுக, அமமுக என மும்முனை போட்டி நிலவுகிறது. அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தனது கட்சி வேட்பாளர்களுக்காக அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார். நேற்று அரவக்குறிச்சி அமமுக வேட்பாளர் சாகுல் ஹமீதுவை ஆதரித்து பிரச்சாரம் செய்த தினகரன் பாஜகவை பிடிபிடியென பிடித்தார்.
பாஜக எங்களை அழிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டியது. சின்னம்மா சிறைக்குப் போகக் காரணமாக இருந்தார்கள். என்னை சிறையில் அடைக்கப் பார்த்தார்கள். 160-க்கும் மேற்பட்ட இடங்களில் ரெய்டு நடத்தி பயமுறுத்தலாம் என்று நினைத்தார்கள். ஆனால் நான் என்ன சொன்னேன்? உங்களால் தினகரனின் கழுத்தை எடுத்துவிட முடியாது. வேண்டுமானால் ஆட்சி, அதிகாரத்தை வைத்து ஏதாவது வழக்குப் போட்டு என்னை சிறையில் அடைப்பீர்கள். 20 ஆண்டுகள் என்னை சிறையில் தள்ளினாலும் 70 வயதில் வெளியே வந்து மீண்டும் பிஜேபியை எதிர்ப்பேன் என்று மண்ணின் வீரத்தோடு அன்றே சொன்னேன் என பாஜகவுக்கு எதிராக அனல் பறக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகிறார் தினகரன்.