தமிழ்நாடு
தினகரனை அழைத்தால் என்ன? எம்எல்ஏ இரத்தின சபாபதி பரபரப்பு பேட்டி!
![Dinakaran 2 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2019/06/Dinakaran-2.jpg)
சில தினங்களுக்கு முன்னர் அதிமுக எம்எல்ஏ ராஜன் செல்லப்பா அதிமுக தோல்விக்கு காரணம் ஒற்றைத் தலைமை இல்லாததே ஆகும். எனவே அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமை வேண்டும் என முதல் குரல் எழுப்பினார். இதனையடுத்து எம்எல்ஏ குன்னம் ராஜேந்திரனும் ஒற்றைத் தலைமை கோரிக்கையை முன்வைத்து குரல் கொடுத்தார்.
இந்த சூழ்நிலையில் ஜூன் 12-ஆம் தேதி அதிமுக எம்எல்ஏக்கள், எம்பிக்களின் ஆலோசனைக்கூட்டம் நடக்க உள்ளதாக ஓபிஎஸ், ஈபிஎஸ் ஆகியோர் அறிக்கை வெளியிட்டனர். அதன்படி இன்று ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. ஆனால் இந்த கூட்டத்துக்கு அதிருப்தி எம்எல்ஏக்கள் கலைச்செல்வன், ரத்தினசபாபதி, பிரபு ஆகியோருக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை.
இதனையடுத்து பிரபல புலனாய்வு தமிழ் வார இதழின் இணையதளத்துக்கு பேட்டியளித்தார் எம்எல்ஏ இரத்தின சபாபதி. அந்த பேட்டியில் பல்வேறு கேள்விகளுக்கு பதில் அளித்த அவர், இரட்டைத் தலைமை கட்சிக்கு மட்டுமல்லாமல் தமிழகத்திற்கே ஒத்துவராது. பொதுச்செயலாளர் தேர்வுதான் சரியானது என்றார். இந்த பொதுச்செயலாளர் தேர்வில் அனைவரையும் அழைத்து ஒற்றைத் தலைமையை தேர்வு செய்யவேண்டும். பிரிந்து இருப்பவர்கள் அனைவரையும் அழைக்க வேண்டும் என்றார்.
டிடிவி தினகரன் உள்ளிட்ட அனைவரையும் அழைக்க வேண்டும் என குறிப்பிட்ட இரத்தின சபாபதி, தினகரனிடம் கனிசமான தொண்டர்கள் உள்ளார்கள். அவர்களையும் அழைத்துப்பேசி ஒன்றுப்படுத்த வேண்டும். ஓபிஎஸ் உள்ளிட்ட 11 எம்எல்ஏக்கள் இந்த ஆட்சிக்கு எதிராக வாக்களித்தார்கள். அவர்களை அழைத்து துணை முதல் அமைச்சர், ஒருங்கிணைப்பாளர் போன்ற பதவியெல்லாம் கொடுக்கும்போது தினகரனை அழைத்தால் என்ன? என அதிரடியாக கேள்வி எழுப்பினார்.