தமிழ்நாடு
தி.மு.க அரசுக்கு உலகமகா நிபுணர்கள் சொல்லி இருப்பார்களோ? டிடிவி தினகரன் கிண்டல்!
திமுக அரசுக்கு உலகமகா நிபுணர்கள் யாராவது சொல்லி இருப்பார்களோ? என அமமுக பொதுச் செயலாளரும் டிடிவி தினகரன் கிண்டலடித்து இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் எம்ஜிஆர் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த சசிகலா மற்றும் டிடிவி தினகரன் ஆகிய இருவரும் தனித்தனியாக காவல்துறையிடம் அனுமதி கேட்டபோது ஒமிக்ரான் வைரஸ் பரவல் காரணமாக அனுமதி அளிக்க முடியாது என காவல் துறை தெரிவித்திருந்தது
இதனை அடுத்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் தலைமை அலுவலத்தில் எம்ஜிஆர் புகைப்படத்தை வைத்து நினைவு அஞ்சலி செலுத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் நேற்று கோவையில் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்ட கூட்டம் நடைபெற்றபோது இந்த கூட்டத்திற்கு காவல்துறை அனுமதி அளித்தது என்பதும், இந்த கூட்டத்திற்கு ஏராளமான திமுக தொண்டர்கள் கலந்து கொண்டனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இதுகுறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் அவர்கள் கூறியிருப்பதாவது: புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர் நினைவிடத்தில் நாங்கள் ஒன்று கூடி அஞ்சலி செலுத்தினால் ஓமிக்ரான் பரவும் என்று தடைபோட்ட ஸ்டாலினின் காவல்துறை, உதயநிதி ஸ்டாலினுக்காக கோயம்புத்தூரில் கூட்டப்பட்ட கூட்டத்தைப் பார்த்து கண்களை மூடிக்கொண்டு இருக்கிறதா?
ஒருவேளை தமிழ்நாட்டில் எதிர்க்கட்சியினரின் கூட்டங்களில் மட்டும்தான் ஓமிக்ரான் பரவும் என்று தி.மு.க அரசுக்கு உலகமகா நிபுணர்கள் யாராவது சொல்லி இருப்பார்களோ? இவர்களுக்கு மனசாட்சியும் கிடையாது; மக்களைப் பற்றி கவலையும் கிடையாது! ‘தீய சக்தி கூட்டம்’ என்று தெரியாமலா சொன்னார்கள் நம் தலைவர்கள்? என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.