தமிழ்நாடு
செல்லூர் ராஜு நன்றி உணர்வோடு இருக்கிறார்: பாராட்டிய டிடிவி தினகரன்!
அதிமுகவுக்கு எதிர்காலத்தில் பெண் தலைமை வரும் என அமைச்சர் செல்லூர் ராஜு கூறியிருந்த நிலையில், அவருக்கு நன்றி உணர்வு உள்ளது என அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் பாராட்டியுள்ளார்.
மதுரையில் கடந்த 13-ஆம் தேதி அதிமுக மகளிரணி நிகழ்ச்சி ஒன்று நடைபெற்றது. அதில் கலந்துகொண்டு பேசிய அமைச்சர் செல்லூர் ராஜு, அதிமுகவுக்கு எதிர்காலத்தில் பெண்களில் ஒருவர் தலைமை ஏற்கும் காலம் வரும். அதிமுகவை வழிநடத்தப் போகிறவர்கள் பெண்கள்தான் என்றார். இதனையடுத்து அவர் சசிகலாவை மனதில் வைத்துத்தான் அவ்வாறு பேசியதாக கூறப்பட்டது. ஆனால் தான் பெண்களை உற்சாகப்படுத்தவே அவ்வாறு பேசினேன் என விளக்கம் அளித்தார் செல்லூர் ராஜு.
இந்நிலையில் சென்னை விமானநிலையத்தில் இதுகுறித்து செய்தியாளர்களிடம் நேற்று பேசிய அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன், மற்றவர்களை விட செல்லூர் ராஜுவுக்கு நன்றி உணர்வு அதிகமாக உள்ளதாகத் தெரிகிறது. சசிகலாவின் பெயரைச் சொல்லி பேசுகிற அளவுக்குத் தைரியம் உள்ளதாக மற்றவர்கள் காட்டிக் கொள்கின்றனர்.
ஆனால், செல்லூர் ராஜு இன்னமும் சின்னம்மா என்று மரியாதையாக அழைக்கிறார். தற்போது மனதில் உள்ளதைச் சொல்லிவிட்டார். அதிமுக தரப்பினர் அவரிடம் கேட்டதும் பயந்துகொண்டு தான் அப்படி பேசவில்லை என்று மறுத்துவிட்டார். ஏற்கெனவே ஜெயலலிதா தலைமையில் கட்சி இருந்தது. தற்போது சசிகலா தலைமையில்தான் கட்சி உள்ளது என்றார் தினகரன்.