தமிழ்நாடு
அறிவிக்கப்படாத மின்கட்டண உயர்வு ஏன்? திமுக அரசுக்கு டிடிவி தினகரன் கேள்வி!
கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பின் போது மின் கட்டணங்கள் மிக அதிகமாக பொதுமக்களுக்கு வந்ததை அடுத்து திமுக தலைமை ஆளுங்கட்சிக்கு எதிராக காரசாரமான கேள்விகளைக் கேட்டது. மின் கட்டணம் என்ற பெயரில் மக்களிடம் கொள்ளை அளிப்பதாகவும் காரசாரமாக விமர்சனம் செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதே திமுக இன்று ஆட்சியில் இருக்கும்போது அதேபோல் மின் கட்டணத்தை உயர்த்தி பொதுமக்களை வாட்டி வதைப்பது ஏன் என்ற கேள்வி சமூக ஆர்வலர்கள் மத்தியில் உள்ளது. இந்த நிலையில் அறிவிக்கப்படாத திடீர் மின்கட்டன உயர்வு குறித்து அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கேள்வியெழுப்பியுள்ளார். அவர் கூறியிருப்பதாவது:
அறிவிக்கப்படாத மின் கட்டண உயர்வு தமிழ்நாடு முழுவதும் செயல்படுத்தப்படுவதாக எழுந்துள்ள குற்றச்சாட்டுகள் குறித்து தமிழக அரசு உரிய விளக்கம் அளிக்க வேண்டும். பயன்பாட்டு அளவுக்கு ஏற்ப நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தைவிட மூன்று மடங்கு வரை அதிகமாக மின் கட்டணம் வசூலிக்கப்படுவது எந்த வகையிலும் நியாயம் அல்ல.
கொரோனா பேரிடரால் பொருளாதார ரீதியான பாதிப்பை சந்தித்து வரும் மக்களுக்கு அறிவிக்கப்படாத மின்கட்டண உயர்வு, கூடுதல் சுமையை ஏற்படுத்தி உள்ளது. வெளிப்படையான நிர்வாகம் பற்றி நிறைய பேசும் தி.மு.க அரசு மின் கட்டண விவகாரத்தில் மக்களிடம் இப்படி மறைமுகமான கட்டணக் கொள்ளையை அரங்கேற்றுவது ஏன்?
டிடிவி தினகரனின் இந்த கேள்வியை அடுத்து மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி அவர்கள் தகுந்த விளக்கம் அளிப்பாரா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.