தமிழ்நாடு
தினகரனை சுயேட்சை என குறிப்பிட்ட ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்!
ஒரு குடும்பத்தின் பிடியில் இருந்து அதிமுகவை மீட்க வேண்டும் என தர்ம யுத்தத்தில் ஈடுபட்ட துணை முதல்வரும் அதிமுக ஒருங்கிணைப்பாளருமான ஓ.பன்னீர்செல்வத்தின் மகன் ரவீந்திரநாத் இந்த மக்களவை தேர்தலில் களமிறங்கியுள்ளார். அவர் போட்டியிடும் தொகுதி குறித்து அதிமுகவில் கலகமே நடந்ததாக அரசியல் வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலையில் ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் டிடிவி தினகரனை சுயேட்சை என விமர்சித்துள்ளார். அதிமுகவை துரோகிகள் கைகளில் இருந்து மீட்டெடுப்போம் என கூறிவரும் டிடிவி தினகரன் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக்கம் என்ற கட்சியை நடத்தி வருகிறார். ஜனநாயக கடமையை ஆற்ற அமமுகவை நடத்தி வருவதாக கூறும் டிடிவி தினகரன் இந்த கட்சிக்கு துணைப் பொதுச்செயலாளராக உள்ளார்.
இவரது அமமுக கட்சி இந்த மக்களவை தேர்தலில் எஸ்டிபிஐ கட்சியுடன் மட்டும் கூட்டணி வைத்து தேர்தலை சந்திக்கிறது. எஸ்டிபிஐ கட்சிக்கு ஒரு தொகுதி மட்டும் ஒதுக்கப்பட்டு மீதமுள்ள 39 தொகுதிகளிலும் அமமுக களமிறங்கியுள்ளது. இதற்கான முதற்கட்ட வேட்பாளர் பட்டியலையும் வெளியிட்டார் டிடிவி தினகரன்.
டிடிவி தினகரனின் தேர்தல் செயல்பாடுகள் அதிமுகவுக்கு கடும் நெருக்கடியையும், வாக்குகளையும் பிரிக்கும் என்பதிலும் சந்தேகமில்லை. குறிப்பாக அதிமுக வாக்குகளை கனிசமாக டிடிவி தினகரன் பிறிப்பார். இந்நிலையில் தினகரன் குறித்த கேள்விக்கு பதில் அளித்த ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத், தற்போதைய சூழலில் அதிமுகவுக்கும், திமுகவுக்கும் தான் போட்டி, சுயேட்ச்சைகள் பற்றி பேசமாட்டேன் என விமர்சித்துள்ளார்.