தமிழ்நாடு
கஜா பாதிப்பு பகுதிகளில் மக்களின் ஹீரோவான தினகரன்: அசத்தும் நிவாரண பணிகள்!
கஜா புயலால் பாதிக்கப்பட்ட நாகை, திருவாரூர், தஞ்சை, புதுக்கோட்டை மாவட்டங்களில் தன்னுடைய நிவாரண பணிகளால் அமமுக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் மக்களின் ஹீரோவாக வலம் வருகிறார். அரசின் நிவாரண பணிகளை மிஞ்சும் வகையில் உள்ளது அமமுகவின் களப்பணி.
சமீபத்தில் தமிழகத்தை தாக்கிய கஜா புயலினால் நாகை, தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்ட மக்கள் தங்கள் வாழ்வாதாரத்தை முற்றிலுமாக இழந்து நிற்கின்றனர். பல கிராமங்கள் மின்சார வசதியில்லாமல் இருளில் மூழுகி கிடக்கின்றன. அரசின் நிவாரண பணிகள் மற்றும் மீட்பு நடவடிக்கைகள் மிகவும் மந்தமாக இருப்பதால் மக்களின் கோபம் ஆளும் தரப்பின் மீது அதிகமாக உள்ளது.
தங்களின் எதிர்ப்பு மற்றும் போராட்டங்களால் அமைச்சர்களையும், அதிகாரிகளையும் திணறடித்து வருகின்றனர் மக்கள். ஆனால் தினகரன் தரப்பின் நிவாரண பணிகள் ஆளும் தரப்புக்கு சவாலாக உள்ளதாக கூறப்படுகிறது. மாவட்டம், தொகுதி, ஒன்றியம் வாரியாக நிவாரண பொருட்களை பிரித்து அனுப்பி காலை பத்து மணிக்கு பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்று நிவாரண பணிகளை செய்கின்றனர். இதனை தினகரனே நேரடியாக கண்காணித்து வருகிறார்.
துவரம்பருப்பு 2 கிலோ, எண்ணெய் 1 கிலோ, 10 கிலோ முதல் 25 கிலோ வரையில் அரிசி பை, மிகவும் நலிவடைந்த குடும்பங்களுக்கு சிறு பண உதவிகளையும் செய்து மக்களின் துயர் துடைத்து வருகிறார்கள் அமமுகவினர். கடந்த ஒரு வாரமாக டெல்டா பகுதிகளில் தீவிரமாக களப்பணி ஆற்றி வரும் தினகரன் பாதிக்கப்பட்ட பல்வேறு கிராமங்களுக்கு நேரில் சென்று மக்களுக்கு ஆறுதல் சொல்லி நிவாரணப் பொருட்களை வழங்கிவருகிறார். இது மக்கள் மத்தியில் தினகரனுக்கு நல்ல வரவேற்பை பெற்று தந்துள்ளது. ஆனால் அரசு தரப்பு தினகரனின் வேகத்துக்கு ஈடுகொடுக்க முடியவில்லை என கள தகவல்கள் தெரிவிக்கின்றன.
தினகரனின் அசத்தல் நிவாரண பணிகள் மக்கள் மத்தியில் நல்ல ரெஸ்பான்ஸை பெற்றுள்ளது ஆளும் தரப்புக்கு சவாலாக உள்ளது. இதனால் தினகரனின் நிவாரண பணிகளை ஊடகங்கள் மூலம் இருட்டடிப்பு செய்யும் வேலையில் ஆளும் தரப்பு ஈடுபட்டுள்ளதாக அரசியல் வட்டாரத்தில் கிசுகிசுக்கப்படுகிறது.