தமிழ்நாடு
சசிகலா தொடர்ந்து ஆடியோ வெளியிடுவது ஏன்?- வாய் திறந்த டிடிவி தினகரன்
அதிமுகவின் முன்னாள் பொதுச் செயலாளர் சசிகலா, அரசியலில் இருந்து விலகியிருப்பதாக தெரிவித்த நிலையில், கடந்த சில வாரங்களாக தனது ஆதரவாளர்களுடன் தொலைபேசி மூலம் பேசி வருகிறார். அது குறித்த ஆடியோக்களும் அவ்வப்போது வெளியாகி பரபரப்பைக் கிளப்பி வருகின்றன.
இந்நிலையில் அதிமுகவின் அவைத் தலைவர் மதுசூதனன் மருத்துவனையில் உடல்நலக் குறைவால் சிகிச்சைப் பெற்று வரும் நிலையில், அவரை அதிமுக கொடி கொண்ட வாகனத்தில் சென்று பார்த்து வந்தார் சசிகலா. அந்த சமயத்தில் மருத்துவமனையில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமியும் இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல் வட்டாரங்களில் இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் சசிகலாவின் செயல்பாடுகள் குறித்து அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், ‘அம்மாவோட இயக்கமான அதிமுகவை மீட்பது தான் சின்னம்மாவின் முயற்சியாகவும் இருக்கிறது. என்னுடைய முயற்சியாக இருப்பதும் அது தான். கண்டிப்பாக நாங்கள் அதிமுகவை மீட்டெடுப்போம்’ என்றார்.
அவர் மேலும், ‘முந்தைய அதிமுக ஆட்சி காலத்தில் எதெல்லாம் எதிர்த்து திமுக போராடியதோ, தற்போது திமுக அந்த விஷயங்களைச் செய்து வருகிறது. 6 மாதங்களுக்கு முன்னர் மதுவிலக்கு வேண்டும் என்று திமுக தலைவரும் தற்போதைய முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் போராடினார். தற்போது அதே விஷயங்களைத் தான் அவரது அரசாங்கமும் செய்து வருகிறது. ஆட்சி மாறியுள்ளதே தவிர காட்சி மாறவில்லை’ என்று குற்றம் சாட்டினார்.