தமிழ்நாடு
“ஊத்தி கொடுத்தவனா நானு?”- சி.வி.சண்முகத்துக்கு தினகரன் பதிலடி
தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று, அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரனை, ஒருமையில் திட்டிப் பேசினார். இதற்கு தினகரன் பதிலடி கொடுத்துள்ளார்.
முன்னதாக தமிழக சட்டத் துறை அமைச்சர் சி.வி.சண்முகம், ‘நான் செய்தியாளர்கள் சந்திப்பில் நிதானமாக பேசினேனா என என்னைக் கேள்வி எழுப்புகிறார் டிடிவி தினகரன். இவரு தான் எனக்கு வந்து ஊத்திக் கொடுத்தாரு. இவரு தொழிலே அது தானே. தினகரனின் குலத் தொழிலே ஊத்திக் கொடுத்து குடியைக் கெடுக்கிறது தான். அவனுங்க குடும்பமே அப்படித் தான் ஊத்திக் கொடுத்து குடியைக் கெடுக்கும். கூவத்தூர்ல அப்படித் தான் ஊத்திக் கொடுத்துக் குடிய கெடுத்தானுங்க. இல்லனு சொல்ல சொல்லுங்க பாப்போம் தினகரன?’ என்று ஆவேசமாக பேசியுள்ளார். ஒரு மாநில அமைச்சர், ஒரு அரசியல் கட்சித் தலைவரை தரம் தாழ்ந்து ஒருமையில் விமர்சித்து உள்ளது, கடும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் இதற்கு ரிப்ளை கொடுத்துள்ள தினகரன், ‘நிதானம் இழந்து, தன்னிலை மறந்து, பதற்றத்தில், கோபத்தின் உச்சிக்கே சென்று, பதவி வெறியில் தங்களது பேராசைகள் எல்லாம் நிராசை ஆகிவிடுமோ என்ற பயத்தில் அதிகார போதை கண்ணை மறைக்கும் அளவிற்கு தாங்கள் வகிக்கின்ற பதவியின் மாண்பையும் மறந்து மனித நிலையிலிருந்து மாறி காட்டு மிருகங்கள் போல கடும் கூச்சலிட்டு வானுக்கும் மண்ணுக்கும் குதிக்கும் ஒரு சில அற்பப் பிறவிகளைப் பார்த்தால் சிரிப்புதான் வருகிறது.
பதவி வெறி படுத்தும் பாடு எப்படியெல்லாம் இவர்களைப் பேச வைக்கிறது. தங்கள் வாயாலேயே தாங்கள் அடிமைகளாக இருந்தோம் என அவர்களை அவர்களாகவே தரம் தாழ்த்திக்கொள்வது உண்மையிலேயே வருத்தமளிக்கிறது. வாழ்க வசவாளர்கள்’ என்று தெரிவித்துள்ளார்.