தமிழ்நாடு
‘ஓபிஎஸ் மனக்கஷ்டத்துடன் இருக்கிறார்; அவர் சசிகலா ஆதரவு நிலைப்பாடு எடுத்தால்…’- தினகரன் ஓப்பன் டாக்
இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் பேசியுள்ள அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் பொதுச் செயலாளர் டிடிவி தினகரன், தமிழக துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பற்றியும், முதல்வர் எடப்பாடி பழனிசாமியுடனான அவரது உறவு பற்றியும் வெளிப்படையாக பேசியுள்ளார்.
தினகரன், ‘மதுரையில் கருணாநிதி சிலையை வைக்க பெருந்தன்மையாக அனுமதி அளித்துள்ளதாக உதயகுமார் பேசுகிறார். வேதியியல் மாற்றம் ஏற்பட்டு வருவதால் ஆட்சியாளர்களுக்கு பயம் ஏற்பட்டுள்ளது.
பிப்ரவரி 24ஆம் தேதி அம்மா பிறந்தநாளை முன்னிட்டு வீட்டிலுள்ள அம்மா திருவுருவப் படத்திற்கு சின்னம்மா மரியாதை செலுத்துவார். மருத்துவர்கள் அறிவுரைப்படி சின்னம்மா தற்போது வீட்டில் ஓய்வெடுத்து வருகிறார்.
திமுக மீதான அச்சம் மக்கள் மத்தியில் தற்போதும் உள்ளது, அது வாக்காக அமமுகவுக்கு கிடைக்கும் என்ற நம்பிக்கை உள்ளது’ என்றவர்,
தொடர்ந்து ஓபிஎஸ் பற்றி பேசினார், ‘ஓபிஎஸ் நிச்சயம் மனது கஷ்டத்துடனே இப்போது இருக்கிறார். அவர் ராமர் அருகில் பரதனாக இருக்க வேண்டியவர். இராவணன் அருகில் இப்போது இருக்கிறார்.
ஒபிஎஸ் சசிகலா ஆதரவு நிலைபாடு எடுத்தால் வரவேற்பேன். அவ்வாறு அவர் முடிவு எடுத்தால் அவர் மீண்டும் பரதனாவார்’ என வெளிப்படையாக தூது விட்டுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் சிறைத் தண்டனையை முடித்து விட்டு, சென்ற மாதம் 27 ஆம் தேதி விடுதலையாகி வெளியே வந்தார் சசிகலா. அதைத் தொடர்ந்து இம்மாதம் தன் ஆதரவாளர்களின் பெரும் வரவேற்புக்கு மத்தியில், கடந்த 8 ஆம் தேதி சென்னை வந்தடைந்தார். அப்போதில் இருந்து இப்போது வரை அவரின் அடுத்த அரசியல் மூவ் என்னவாக இருக்கும் என்கிற எதிர்பார்ப்பில் அதிமுக வட்டாரம் உள்ளது. இந்நிலையில் தினகரன், பன்னீர்செல்வத்தைப் பற்றிப் பேசி அரசியல் பட்டாசைப் பற்ற வைத்துள்ளார்.