இந்தியா

மாநிலங்களவையிலும் நிறைவேறியது முத்தலாக் தடை சட்டம்!

Published

on

மக்களவையில் சில தினங்களுக்கு முன்னர் நிறைவேற்றப்பட்ட முத்தலாக் தடைச்சட்டம் நேற்று மாநிலங்களவையிலும் நிறைவேறியுள்ளது.

கடந்த மோடி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட முத்தலாக் சட்டம் நிறைவேராமல் போனதால் தற்போது இதனை மீண்டும் கொண்டுவந்துள்ளது மோடி அரசு. ஆனால் இந்த சட்டம் இஸ்லாத்தின் ஷரியத் விவகாரத்தில் தலையிடுகிறது என கடுமையாக இஸ்லாமிய அமைப்புகள், எதிர் கட்சிகள் எதிர்த்து வருகின்றன. ஆனால் அத்தனை எதிர்ப்பையும் மீறி மக்களவையில் இந்த சட்டத்தை நிறைவேற்றியது மத்திய அரசு.

இதனையடுத்து மாநிலங்களவையில் இதனை நிறைவேற்ற மத்திய சட்ட அமைச்சர் ரவிசங்கர் பிரசாத் ராஜ்யசபாவில் நேற்று தாக்கல் செய்தார். இதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, காங்கிரஸ், திமுக உள்ளிட்ட கட்சிகள் கடுமையான எதிர்ப்பை தெரிவித்தன. மக்களவையில் இதற்கு ஆதரவாக வாக்களித்த அதிமுக மாநிலங்களவையில் எதிர்ப்பு தெரிவித்து பேசியது.

ஆனால் எதிர்த்து வாக்களிக்காமல் வெளிநடப்பு செய்தது அதிமுக. இந்நிலையில் மாநிலங்களவையில் இந்த மசோதா வாக்கெடுப்பின் போது ஆதரவாக 99 வாக்குகளும், எதிராக 84 வாக்குகளும் பெற்று நிறைவேறியது. அதிமுக, ஐக்கிய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் வெளிநடப்பு செய்தது. இந்நிலையில் மாநிலங்களவையிலும் இந்த மசோதா நிறைவேறியுள்ளதால் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் கிடைத்தவுடன் முத்தலாக் சட்டம் நடைமுறைக்கு வரவுள்ளது.

seithichurul

Trending

Exit mobile version