இந்தியா
மேற்கு வங்கத்தில் பரபரப்பு! அமைச்சர்கள், எம்எல்ஏ.,க்கள் அடுத்தடுத்து ராஜினாமா!!
மேற்கு வங்கத்தில் அமைச்சர்கள், எம்எல்ஏ.,க்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்து வரும் நிகழ்வுகள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
மேற்கு வங்கத்தில் மம்தா பாணர்ஜி தலைமையிலான திரிணாமுல் காங்கிரஸ் ஆட்சி நடந்து வருகிறது. மேலும், அங்கு விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. இந்த நிலையில், திரிணாமுல் கட்சியில் இருந்து அடுத்தடுத்து அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்துள்ளனர். அதில் சிலர் நேரடியாக பாஜகவிற்கு சென்று தங்களை இணைத்துக் கொண்டனர்.
கடந்த டிசம்பர் 17 ஆம் தேதி சுவேந்து அதிகாரி தனது எம்எல்ஏக்கள் மற்றும் ஆதரவாளர்களுடன் அமித்ஷா முன்னிலையில் பாஜகவில் இணைந்தார். இவர் மம்தா பாணர்ஜிக்கு நெருக்கமாக பணியாற்றி வந்தார். ஆனால், அவரே பாஜகவில் இணைந்தது மம்தாவுக்கு கலக்கத்தை ஏற்படுத்தியது.
அதனைத் தொடர்ந்து கடந்த 5-ம் தேதி அம்மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் லஷ்மி ரத்தன் சுக்லா ராஜினாமா செய்துவிட்டார். அதே போல், சாந்திபூர் தொகுதி எம்எல்ஏவும் திடீரென ராஜினாமா செய்து, பாஜகவில் இணைந்துவிட்டார்.
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு மம்தா பாணர்ஜி சூறாவளி பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரும் நிலையில், அமைச்சர்கள், எம்எல்ஏக்கள் அடுத்தடுத்து ராஜினாமா செய்வது கட்சியில் பிளவை ஏற்படுத்தியுள்ளது. மேலும், இதற்கு அமித்ஷா தான் முக்கிய காரணம் என்றும் சொல்லப்படுகிறது.