இந்தியா

உங்களுக்கெல்லாம் முதுகெலும்பே இல்லை: மக்களவையில் ஓபிஎஸ் மகனை அவமானப்படுத்திய திமுக எம்பி டி.ஆர்.பாலு!

Published

on

மக்களவையில் நேற்று திமுக உறுப்பினர் டி.ஆர்.பாலு காஷ்மீர் விவகாரம் குறித்து பேசிய போது அதிமுக உறுப்பினர் ரவீந்தரநாத் குமார் குறுக்கீட்டார். அப்போது டி.ஆர்.பாலு, உங்களுக்கெல்லாம் முதுகெலும்பே இல்லை, அமருங்கள் என ரவீந்திரநாத் குமாரை பார்த்து ஆவேசமாக கூறினார்.

ஜம்மு காஷ்மீரை பிரிப்பது தொடர்பான மசோதா மீதான விவாதம் நேற்று மக்களவையில் நடைபெற்றது. அப்போது பேசிய திமுக மக்களவை குழு தலைவர் டி.ஆர்.பாலு, பாஜகவினரை பார்த்து உங்களால் ஏன் தமிழகம், கேரளா போன்ற தென் மாநிலங்களில் வெற்றிபெற முடியவில்லை. இதற்கான காரணம் என்ன? ஏனெனில் அறிவார்ந்தவர்கள் உங்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள். அவர்கள் விழிப்புடன் உள்ளனர் என்றார்.

அப்போது அதிமுக உறுப்பினர் ரவீந்திரநாத் குமார் குறுக்கீட்டு எதிர்ப்பு தெரிவித்து பேச முயன்றார். இதனால் கோபமடைந்த டி.ஆர்.பாலு, ரவீந்திர நாத் குமாரை பார்த்து, ஏய் உங்களுக்கெல்லாம் முதுகெலும்பே இல்லை. இருக்கையில் அமருங்கள். மக்களவை என்பது முதுகெலும்புள்ள உறுப்பினர்களைக் கொண்டது. உங்களைப் போன்றவர்களுக்கானது கிடையாது என்றார்.

தொடர்ந்து டி.ஆர்.பாலுவுக்கு ஆதரவாக கனிமொழி எழுந்து, எதற்காக அவர் குறுக்கிட்டுப் பேசுகிறார் என்று சபாநாயகரிடம் முறையிட்டார். இதனையடுத்து பேசிய டி.ஆர்.பாலு, எனக்கு முதுகெலும்பு இருப்பதால் சபாநாயகர் என்னை பேச அனுமதித்துள்ளார். முதுகெலும்பு அற்றவர்களுக்கு அனுமதியளிக்கவில்லை என்று கூறினார். இதற்கு திமுக உறுப்பினர்கள் மேஜையைத் தட்டி வரவேற்றனர். திமுகவினரின் அந்த செயல்பாடு ரவீந்திரநாத் குமாரை கிண்டல் செய்வது போல இருந்தது.

seithichurul

Trending

Exit mobile version