தமிழ்நாடு
கலெக்டருக்கு குடிதண்ணீருக்கு பதிலாக விஷத்தன்மை வாய்ந்த நீரை கொடுத்த ஊழியர்!
புதுச்சேரியில் மாவட்ட ஆட்சி தலைவருக்கு குடிதண்ணீருக்கு பதிலாக விஷத்தன்மை வாய்ந்த நீரை குடிப்பதற்கு கொடுத்த சம்பவம் அரங்கேறியுள்ளது.
புதுச்சேரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது கலெக்டர் அமரும் மேஜையில் குடிநீர் பாட்டிலில், குடிநீருக்கு பதிலாக விஷத்தன்மை வாய்ந்த திரவம் வைக்கப்பட்டிருந்தது.
தண்ணீரின் நிறம் மாறுபட்டு இருந்ததால், அதனை கவனித்த கலெக்டர், குடிநீரை ஆராயும்படி கூறியுள்ளார். இதனையடுத்து குடிநீர் பாட்டிலில் விஷத்தன்மை கொண்ட திரவம் இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக தன்வந்திரி நகர காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கலெக்டருக்கு குடிநீர் வைத்தது யார், அதில் விஷத்தன்மை கலந்தது யார் என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், இந்த சம்பவம் குறித்து புதுச்சேரி ஆளுநர் கிரண்பேடி தனது டுவிட்டர் பக்கத்தில் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.