இந்தியா
விவசாயிகள் போராட்டத்துக்கு அன்லைனில் ஆதரவு: 22 வயதுப் பெண் மீது ‘தேசத்துரோக வழக்கு’, மேலும் இரண்டு பேருக்கு கைது வாரன்ட்!
மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய வேளாண் சட்டங்களை எதிர்த்துப் போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த காரணத்திற்காக டெல்லி போலீஸ் பலர் மீது வழக்குத் தொடர்ந்து வருகிறது. விவசாயிகள் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்த, பெங்களூருவைச் சேர்ந்த 22 வயது மதிக்கத்தக்க சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர் திஷா ரவியை, டெல்லி போலீஸ் கைது செய்திருந்தது. இந்நிலையில் மேலும் இருவருக்கு டெல்லி போலீஸ் கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது.
டெல்லியில் மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தொடர் போராட்டத்தை பெருந்திரளான விவசாயிகள் நடத்தி வருகிறார்கள். இந்தப் போராட்டத்துக்கு சுவீடனைச் சேர்ந்த இளம் சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர், கிரெட்டா துன்பெர்க், சில நாட்களுக்கு முன்னர் ஆதரவு தெரிவித்தார். அப்போது அவர், இந்தப் போராட்டத்துக்கு ஆன்லைனில் ஆதரவு திரட்ட விரும்புவோர், அதை எப்படிச் செய்யலாம் என்பது குறித்த ‘டூல்கிட்’ ஒன்றையும் ட்வீட் செய்திருந்தார். அதைப் பயன்படுத்தி விவசாயிகள் போராட்டத்துக்கு அதிக ஆதரவு திரட்ட முடியும் எனத் தெரிகிறது.
We stand in solidarity with the #FarmersProtest in India.
https://t.co/tqvR0oHgo0— Greta Thunberg (@GretaThunberg) February 2, 2021
இந்நிலையில் திஷா ரவி, இந்த ‘டூல்கிட்’ உருவாக்கத்தில் பங்காற்றியவர் என்று குற்றம் சாட்டி டெல்லி போலீஸ் கைது செய்துள்ளது. முன்னதாக துன்பெர்க் மீது டெல்லி போலீஸ் இந்த விவகாரத்துக்காக வழக்குத் தொடர்ந்திருந்தது. அந்த வழக்கில் தான், திஷா தற்போது கைது செய்யப்பட்டு தேசத் துரோக வழக்கு பதிவு செய்யப்பட்டு உள்ளது. அதே வழக்கில் தற்போது சுற்றுச்சூழல் செயற்பாட்டாளர்கள் நிகிதா ஜேகப் மற்றும் சாந்தனு ஆகியோர் மீது கைது வாரன்ட் பிறப்பித்துள்ளது டெல்லி காவல் துறை.