தமிழ்நாடு
செப்டம்பர் 1 முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்வு: அதிர்ச்சியில் பொதுமக்கள்
செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயரும் என தேசிய நெடுஞ்சாலைத் துறை அறிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழகத்தில் செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் 14 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்கிறது என்றும் இந்த கட்டண உயர்வு 8% வரை இருக்கும் என்றும் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்திலுள்ள திண்டிவனம் – உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள விக்கிரவாண்டி, உளுந்தூர்பேட்டை – பாடலூர் சாலையில் உள்ள திருமாந்துறை, சென்னை – தடா சாலையில் உள்ள நல்லூர், சேலம் – உளுந்தூர்பேட்டை சாலையில் உள்ள மேட்டுப்பட்டி, சேலம் – குமாரபாளையம் சாலையில் உள்ள வைகுந்தம், திருச்சி – திண்டுக்கல் சாலையில் உள்ள பொன்னம்பலப்பட்டி, தஞ்சாவூர் – திருச்சி சாலையில் உள்ள வாழவந்தான்கோட்டை ஆகிய 14 சுங்கச் சாவடிகளில் இந்த கட்டண உயர்வு செப்டம்பர் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது என கூறப்படுகிறது.
இது குறித்து தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரி ஒருவர் கூறியபோது ஏற்கனவே செய்யப்பட்ட ஒப்பந்தத்தின்படி ஒவ்வொரு ஆண்டும் கட்டணம் உயர்த்தப்படுவது வழக்கமானது என்றும், அதன்படி அதிகபட்சமாக 8 சதவீதம் வரை இந்த கட்டணம் உயர உள்ளது என்றும், கட்டண உயர்வு குறித்து முறையான அறிவிப்பை தேசிய நெடுஞ்சாலைத்துறை இன்னும் ஓரிரு நாளில் வெளியிடும் என்றும் தெரிவித்தார்.
இந்த நிலையில் தேசிய நெடுஞ்சாலை துறையின் இந்த அறிவிப்பு வாகன ஓட்டிகளுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து தமிழ்நாடு மணல் லாரி உரிமையாளர் நலச்சங்க கூட்டமைப்பின் தலைவர் யுவராஜ் அவர் கூறியபோது ’சுங்கச்சாவடிகளில் ஆண்டுதோறும் கட்டணத்தை உயர்த்துவது அத்தியாவசிய பொருட்களின் விலை உயரும் என்றும், இதனால் வாகன ஓட்டிகள் வாகன உரிமையாளர்கள் கடுமையாக அவதிப்படுகின்றனர் என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பல ஆண்டுகளாக சுங்கச்சாவடிகளை இழுத்து மூட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ள நிலையில் சுங்கச்சாவடி கட்டணம் மீண்டும் உயர்த்தப்படுவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.