தமிழ்நாடு
வேலூர் அருகே திடீர் நிலநடுக்கம்: ரிக்டர் அளவில் எவ்வளவு?
![afghan earthquake - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/08/afghan-earthquake.jpg)
இந்தியா உள்பட உலகின் பல பகுதிகளில் அவ்வப்போது நிலநடுக்கம் ஏற்பட்டு வரும் நிலையில் இன்று அதிகாலை தமிழகத்திலுள்ள வேலூர் பகுதியில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அந்த பகுதி மக்கள் கடும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் இன்று மிதமான நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும் இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 3.6 ஆக பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும் புவியியல் ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்துள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் இருந்து 59 கிலோமீட்டர் தொலைவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டது என்றும் இன்று அதிகாலை சரியாக 4.17 மணி அளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் காரணமாக எந்த விதமான சேதமும் ஏற்படவில்லை என்றும் தேசிய புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்த நில அதிர்வு வரைபடங்கள் மூலம் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் பெரும்பாலான மக்களால் உணரவில்லை என்றும் இந்த நிலநடுக்கத்தால் எந்தவித பாதிப்பும் ஏற்படவில்லை என்றும் எனவே பொதுமக்கள் அச்சப்பட தேவையில்லை என்றும் கூறப்படுகிறது.
எனினும் ஒரு சிலர் இந்த நிலநடுக்கத்தை உணர்ந்ததாகவும் இதனை அடுத்து அச்சம் காரணமாக வீட்டை விட்டு வெளியே வந்து இருப்பதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. வேலூர் பகுதியில் திடீரென ஏற்பட்ட நிலநடுக்கம் காரணமாக அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.