தமிழ்நாடு
சென்னையில் இரவு முதல் மழை: இன்றும், நாளையும் எந்தெந்த பகுதிகளில் மழை பெய்யும்?
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக தமிழகத்தின் சில மாவட்டங்களில் மழை பெய்யும் என்று வானிலை மையம் தெரிவித்திருந்தது. இந்நிலையில் சென்னையில் பல்வேறு இடங்களில் லேசான மழை பொழிந்து வருகிறது. சென்னையில் தற்போது எழும்பூர், புரசைவாக்கம், ஈக்காட்டுதாங்கல், சென்ட்ரல், வடபழனி, கோயம்பேடு, கிண்டி, வண்டலூர், பெருங்களத்தூர் போன்ற இடங்களில் மழை பெய்தது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் ஆகஸ்ட் 23ஆம் தேதி வரை மழை நீடிக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது. நீலகிரி, கோவை, தென்மாவட்டங்கள், புதுவை, மற்றும் காரைக்காலில் ஓரிரு இடங்களில் இன்று லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாளை தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, பெரம்பலூர், அரியலூர், கிருஷ்ணகிரி, தர்மபுரி, சேலம், வேலூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
மேலும் ஆகஸ்ட் 22ஆம் தேதி திருச்சி, மதுரை, நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல் மற்றும் தென் மாவட்டங்களிலும் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருக்கிறது.
அதேபோல் 23ஆம் தேதி தமிழகத்தின் உள் மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய கனமழை வாய்ப்பிருப்பதாகவும் சென்னையை பொருத்தவரை வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும் நகரின் ஒரு சில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.