தமிழ்நாடு
திருவொற்றியூர் குடியிருப்பு வீடுகள் இடிந்த விவகாரம்: 20 ஆயிரம் வீடுகள் இடிக்கப்படுகிறதா?
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் குடிசை மாற்று வாரியத்திற்கு சொந்தமான திருவொற்றியூரில் உள்ள மூன்று மாடி குடியிருப்பு ஒன்று திடீரென இடிந்து விழுந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.இதில் இருந்த 24 வீடுகள் தரைமட்டமாகியதாகவும் நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் லேசான காயங்களுடன் உயிர் தப்பிய தாகவும் செய்திகள் வெளியானது.
கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்ட இந்த வீடுகளில் 336 குடியிருப்புகள் இருந்த நிலையில் இரண்டாயிரத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வந்தனர். எப்பொழுதும் பரபரப்பாக இருக்கும் அந்த பகுதியில் திடீரென 24 வீடுகள் இடிந்து விழுந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்த நிலையில் திருவெற்றியூர் வீட்டு வசதி வாரியத்தின் வீடுகள் இடிந்து விழுந்தது குறித்து விசாரணை நடத்தப்பட்டது என்பதும், இதுகுறித்து தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆய்வு செய்து தற்போது அறிக்கை சமர்ப்பித்துள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
திருவொற்றியூரில் சேதமடைந்த நிலையில் தற்போது 20 ஆயிரத்து 453 வீடுகள் இருப்பதாகவும் இந்த குடியிருப்புகளை உடனே இடிக்க வேண்டுமென நகர்ப்புற வாழ்வாதார மேம்பாட்டு வாரியத்திடம் தொழில்நுட்ப வல்லுநர் குழு பரிந்துரை செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
சேதமடைந்த 20 ஆயிரத்து 453 குடியிருப்புகளை உடனடியாக இடித்து மறுகட்டுமானம் மேற்கொள்ள வேண்டுமென தொழில்நுட்ப வல்லுநர் குழு பரிந்துரை செய்து இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் தரமற்ற வகையில் இந்த குடியிருப்புகளை கட்டிய ஒப்பந்ததாரர் மற்றும் அதற்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்கவும் வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.