செய்திகள்
ஹெலிகாப்டர் விபத்து பற்றி வதந்தி பரப்பினால் கடும் நடவடிக்கை – காவல்துறை எச்சரிக்கை
குன்னூர் அருகே காட்டேரி என்ற இடத்தில் நேற்று முன்தினம் இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று விபத்துக்குள்ளானது. இந்த ஹெலிகாப்டரில் பயணம் செய்த முப்படை தளபதி பிபின் ராவத், அவருடைய மனைவி உள்பட 13 பேர் பலியாகினர். கேப்டன் வருண்சிங் மட்டும் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
பலியான வீரர்களின் உடல்கள் இன்று முழு ராணுவ மரியாதையுடன் இறுதிச்சடங்கு செய்யப்பட உள்ளது. இந்த விமான விபத்து குறித்து பல சர்ச்சையான கருத்துக்களை சிலர் சமூக வலைத்தளங்களில் பகிர்ந்து வருகின்றனர். இது தொடர்பாக பாஜக ஆதரவாளர் மாரிதாஸ் ஏற்கனவே தமிழக காவல்துறையால் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது.
இந்திய விமானப்படை தனது ட்விட்டர் பக்கத்தில் ‘குன்னூர் ஹெலிகாப்டர் விபத்து குறித்து விசாரிக்க குழு அமைக்கப்பட்டுள்ளது. விசாரணை நடத்தப்பட்டு உண்மையை வெளிக்கொண்டு வரப்படும் என்றும் அதுவரை யூகமான கருத்துக்களை வெளியிடுவதை தவிர்க்கவும்’என்றும் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், குன்னூரில் ஹெலிகாப்டர் விபத்து தொடர்பாக தவறான தகவல்களை சமூக வலைத்தளத்தில் பரப்பினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தமிழக காவல்துறையும் எச்சரித்துள்ளது.