இந்தியா
தமிழில் பதவியேற்ற தமிழக எம்பிக்கள்: மக்களவை முதல் நாளே ஆரம்பித்த மொழிப் போர்!
பாஜக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஆட்சி அமைத்து முதல் மக்களவை கூட்ட தொடர் நேற்று தொடங்கியது. இதில் தற்காலிக மக்களவை சபாநாயகராக வீரேந்திர குமார் பதவியேற்றார். அவர் முன்னிலையில் நேற்று பிரதமர் மோடி உள்ளிட்ட பாஜகவினர் பதவியேற்றனர்.
இந்நிலையில் இரண்டாவது நாளான இன்று தமிழக எம்பிகள் பதவியேற்றனர். நேற்று பலர் தங்கள் பிராந்திய மொழிகளில் பதவியேற்றதால் இன்று தமிழக எம்பிக்கள் 39 பேரும் தமிழிலேயே பதவியேற்றனர். பதவியேற்றபின் முடிவில் தமிழக எம்பிக்கள் தங்கள் விருப்பமான வாசகத்தை கூறி முடிவு செய்தனர்.
அதில், தமிழக எம்பிக்கள் பலர் வாழ்க தமிழ், பெரியார் வாழ்க, தமிழ் வாழ்க என்ற முழக்கத்தோடு தங்கள் உரையை முடித்தனர். அப்போது ஒவ்வொருமுறை தமிழக எம்பிக்கள் தங்கள் உரையை தமிழில் அந்த குறிப்பிட்ட வசனத்துடன் முடிக்கும்போது மக்களவையில் உள்ள மற்ற மாநில குறிப்பாக பாஜக எம்பிக்கள் பாரத் மாதா கீ ஜெய், ஜெய் ஸ்ரீராம் போன்ற வசனங்களை எதிர்ப்புக்கு கூறி முழக்கமிட்டனர்.
தமிழ் வாழ்க என்ற தமிழக எம்பிக்களின் முழக்கத்துக்கு எதிர் முழக்கமாக பாரத் மாதா கீ ஜெய் என கூறப்பட்டதால் மக்களவையில் சலசலப்பு ஏற்பட்டது. மேலும் இன்று தமிழக எம்பிக்கள் தமிழில் பதவியேற்றபோதும் சில சலசலப்புக்கள் இருந்தது.