தமிழ்நாடு
நகைக்கடன் தள்ளுபடி இவங்களுக்கு மட்டும்தானா: கசிந்த தகவல்!
திமுக தனது தேர்தல் அறிக்கையில் முக்கிய பல வாக்குறுதிகளை அளித்த நிலையில் அவற்றில் ஒன்று கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்பது. இதனை அடுத்து திமுக ஆட்சி ஏற்பட்டு தற்போது மூன்று மாதங்களுக்கு மேல் ஆகியுள்ள நிலையில் நகை கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு எப்போது வரும் என்று பொதுமக்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இந்த நிலையில் வரும் பட்ஜெட் கூட்டத் தொடரில் நகைக்கடன் தள்ளுபடி குறித்த அறிவிப்பு வெளிவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால் அதே நேரத்தில் நகைகளை வைத்து கடன் பெற்ற அனைவருக்கும் இந்த தள்ளுபடி கிடைக்காது என்றும் ஒரு சிலருக்கு மட்டுமே கிடைக்கும் என்றும் தகவல்கள் கசிந்து வருகின்றன.
குறிப்பாக 5 பவுன் அடமானம் வைத்து நகை கடன் வாங்கியவர்களுக்கு மட்டும் கடன் தள்ளுபடி செய்யப்படும் என்றும் ஐந்து பவுனுக்கு மேல் நகைகளை வைத்து கடன் பெற்றவர்களுக்கு கடன் தள்ளுபடி கிடைக்க வாய்ப்பு இல்லை என்றும் கூறப்பட்டு வருகிறது.
அதேபோல் நகை கடன் பெற்றவர்கள் அரசு பணியில் இருந்தாலோ அல்லது அவரது குடும்பத்தைச் சேர்ந்தவர்கள் யாராவது அரசு பணியில் இருந்தாலும் தள்ளுபடி கிடைக்காது என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளன.
மேலும் நகை கடன் தள்ளுபடி ஆகும் என்ற எதிர்பார்ப்பில் நகைகளை வேண்டுமென்றே அடமானம் வைத்தவர்களும் தள்ளுபடி பட்டியலில் சேர்க்கப்பட மாட்டார்கள் என்றும் கூறப்படுகிறது. நகை கடன் தள்ளுபடி குறித்து ஆகஸ்ட் 13ஆம் தேதி பட்ஜெட் கூட்டத்தொடரில் அறிவிக்கப்படும் என்று கூறப்படும் நிலையில் அந்த அறிவிப்பில் என்னென்ன இருக்கும் என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.