தமிழ்நாடு
‘தமிழக அரசு கூடங்குளம் அணுஉலை திட்டத்தையும் எதிர்க்க வேண்டும்’
கூடங்குளம் அணுஉலை மின் உற்பத்தி திட்டத்தை தமிழ்நாடு அரசு முற்றிலுமாக எதிர்க்க வேண்டும் என்று அணுஉலை திட்டங்களுக்கு எதிராக தொடர்ந்து போராடி வரும் வரும் சுப.உதயகுமார் வலியுறுத்தி உள்ளார்.
இன்று கூடங்குளத்தில் 5 மற்றும் 6 வது அணுஉலைகளை அமைப்பதற்கான கட்டுமானப் பணிகள் தொடங்கப்பட்டன. இதைத் தொடர்ந்து தமிழ்நாடு மீனவர் நலத் துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை நேரில் சந்தித்து கூடுங்குளம் அணுஉலை திட்டத்தை எதிர்த்து, தடுத்து நிறுத்துமாறு வலியுறுத்தி உள்ளார் சுப.உதயகுமார்.
அவர், ‘தமிழ்நாட்டில் ஆட்சி பொறுப்பு ஏற்றிருக்கும் திமுக அரசு, மக்கள் விரோத திட்டங்களான 8 வழிச் சாலைத் திட்டம், மீத்தேன் எடுக்கும் திட்டம், ஹைட்ரோ கார்பன் எடுக்கும் திட்டம் போன்றவற்றுக்கு தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. அது வரவேற்கத் தக்க விஷயங்கள் தான். அதைப் போலவே கூடங்குளம் அணுஉலை மின் உற்பத்தித் திட்டத்தையும் தமிழ்நாடு அரசு எதிர்க்க வேண்டும்.
கூடங்குளம் அணுஉலை மின் உற்பத்தித் திட்டம் என்பது மொத்தத் தமிழ்நாட்டுக்கே கேடு விளைவிக்கும், ஆபத்தைக் கொண்டு வரும். எனவே தமிழக அரசு அதை முற்றிலும் எதிர்க்க வேண்டும்’ என்று கூறியுள்ளார்.