தமிழ்நாடு
ரேஷன் அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய் அளவு குறைப்பு: என்ன காரணம்?
ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வரும் மண்ணெண்ணெய் அளவு குறைக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு ஒவ்வொரு மாதமும் ஒரு குறிப்பிட்ட அளவு மண்ணெண்ணெய் வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் இனி வரும் மாதங்களில் மண்ணெண்ணெய் அளவு நுகர்வோர்களுக்கு வழங்கப்படுவது குறைக்கப்படும் என உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அனைத்து ரேஷன் கடை அலுவலர்களுக்கு சுற்றறிக்கை ஒன்று அனுப்பப்பட்டுள்ளது. அந்த சுற்றறிக்கையில் மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்கி வந்த வழக்கமான மண்ணெண்ணெய் அளவில் இருந்து தற்போது 20 சதவீதம் மட்டுமே ஒதுக்கி வருகிறது.
எனவே அதனை ஈடுகட்டும் வகையில் நுகர்வோருக்கு வழங்க வேண்டிய மண்ணெண்ணெய் அளவை குறைக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களிடம் இருந்து புகார் வருவதை தவிர்ப்பதற்காக மண்ணெண்ணெய் அளவு குறைக்கப்பட்டது குறித்து விவரங்களை கடையில் விளம்பரம் செய்யப்பட வேண்டும் என அந்த சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு மண்ணெண்ணெய் அளவு குறைக்கப்பட்டது குறித்து பொதுமக்கள் பெரும் அதிருப்தியை தெரிவித்து வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் மண்ணெண்ணெய் வாங்கும் பெரும்பாலானோர் கேஸ் அடுப்பு வைத்து இருப்பதால் ரேஷன் கடையில் வாங்கும் மண்ணெண்ணெய்யை அவர்கள் விற்பனை செய்வதாகவும் கூறப்படுகிறது.