தமிழ்நாடு
அதிர்ச்சி.. பெட்ரோல், டீசல் மீதான வரியை உயர்த்தி தமிழக அரசு அதிரடி!
கொரோனாவால் ஏற்பட்டு வரும் அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வில் மக்கள் தவித்து வரும் நிலையில், தமிழகத்தில் பெட்ரோல், டீசலுக்கான மதிப்புக் கூட்டு வரியை அரசு உயர்த்தி அறிவித்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழக அரசு இன்று வெளியிட்டுள்ள முக்கிய அறிவிப்பில் பெட்ரோலுக்கான மதிப்புக் கூட்டு வரியை 28 சதவீதத்திலிருந்து 34 சதவீதமாகவும் டீசல் மீதான மதிப்புக்கூட்டு வரியை 20 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்த்துவதாகத் தெரிவித்துள்ளது.
அதன் காரணமாக நாளை முதல் பெட்ரோல் லிட்டர் விலை 3.25 காசும், டீசல் விலை லிட்டருக்கு 2.60 காசும் உயருகின்றன.
பெட்ரோல், டீசல் மீதான விலை உயரும் போது அத்தியாவசிய பொருட்கள் மற்றும் சேவைகள் மீதான விலையும் அதிகரிக்கும். அதனால் பொதுமக்களுக்குக் கூடுதல் செலவாகும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிந்தும் மத்திய அரசு அதைக் குறைக்காமலே உள்ளது. தமிழக அரசு கேட்டுள்ள கொரோனா நிவாரண நிதியையும் மத்திய அரசு அளிக்காமல் காலத்தைக் கடத்தி வருகிறது. எனவே கொரோனா பாதிப்பு மற்றும் ஊரடங்கால் தமிழகத்திற்கு ஏற்பட்டு வரும் கூடுதல் செலவைச் சரி செய்ய அரசு இந்த வரி உயர்வு முடிவை எடுத்துள்ளது.