தமிழ்நாடு
அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் புகார் பதிவேடு: தமிழக அரசு உத்தரவு
தமிழகத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடைகளிலும் புகார் பதிவேடு வைக்குமாறு தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. இணையவழியாக புகார் முறையும் நடைமுறையில் இருக்கும் என அறிவிப்பு. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:
மாண்புமிகு உணவு மற்றும் நுகர்பொருள் வழங்கல் துறை அமைச்சர் 08.07.2021 அன்று திருவள்ளூரில் நடத்திய ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட சட்டமன்ற உறுப்பினர்கள் . நியாயவிலைக் கடைகள் தொடர்பான புகார்களை இணையவழியில் தெரிவிக்கப் பல்வேறு சிரமங்கள் உள்ளதால், அந்தந்தக் கடைகளில் நேரடியாக எழுத்து மூலம் தெரிவிக்கும் வகையில் ஒவ்வொரு கடையிலும்: புகார்ப் பதிவேடு வைக்க வேண்டும் என்று கேட்டுகொண்டார்கள்.
இதனால் புகாரை உடனடியாக தெரிவிக்கவும் அதன் மீது தொடர்புடைய அலுவலர்கள் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கவும் முடியும் என்றும் கூறினார்கள். இதன் முழுப்பரிமாணத்தையும் ஆய்ந்து ஏற்கனவே நடைமுறையில் இருக்கும் இணைய வழியில் புகார் தெரிவிக்கும் நடைமுறையுடன் ஒவ்வொரு நியாயவிலைக் கடைகளிலும் புகார்ப் பதிவேடு பராமரிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
இதனை உடனடியாக அமல்படுத்த ஆணையாளர், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை கேட்டுக்கொள்ளப்படுகிறார். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் நிலையில் அரசின் இந்த அறிவிப்புக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.
இனி நுகர்வோர்கள் ரேசன் கடை குறித்த புகார்களை அந்தந்த கடைகளில் வைக்கப்பட்டிருக்கும் புகார் பதிவேட்டிலேயே பதிவு செய்யலாம் என்பதும், புகார் குறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.