தமிழ்நாடு

போக்குவரத்துத்துறை ஊழியர்களுக்கு ரூ.7.1 கோடி ஊக்கத்தொகை: தமிழக அரசு அறிவிப்பு

Published

on

பொங்கல் திருநாளையொட்டி ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 161 போக்குவரத்து கழக பணியாளர்களுக்கு 7 கோடியே ஒரு லட்சம் ரூபாய் ஊக்கத்தொகை வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது குறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாட்டில் சிறப்பான மற்றும் திறமையான போக்குவரத்துச் சேவையை பொதுமக்களுக்கு அளிப்பதில் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் முக்கிய பங்காற்றுகின்றன. இந்தியாவிலேயே தமிழகத்தில் இயங்கும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் தான் பயணிகள் அடர்வு, பேருந்து பயன்பாடு, எரிபொருள், செயல் திறன் ஆகியவற்றில் உயர்ந்து விளங்குகின்றன.

குக்கிராமம் முதல் மாநகரங்கள் உள்பட மக்கள் அனைவருக்கும் தங்கு தடையின்றி போக்குவரத்து சேவை அளிக்கப்பட்டு வருகின்றது. தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள், தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம், பல்லவன் போக்குவரத்து அறிவுரை பணிக்குழு ஆகிய அனைத்து நிறுவனங்களிலும் தற்போது சுமார் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 161 பணியாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

பொங்கல் திருநாளை ஒட்டி தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்கள் தமிழ்நாடு போக்குவரத்து வளர்ச்சி நிதி நிறுவனம் மற்றும் பல்லவன் போக்குவரத்து அறிவுரை பணிக்குழு ஆகியவற்றில் பணிபுரியும் பணியாளர்கள் 2021 ஆம் ஆண்டில் 90 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் ஆனால் 150 நாட்களுக்குள் குறைவாக பணிபுரிந்த ஊழியர்களுக்கு 85 ரூபாய், 151 நாட்கள் மற்றும் அதற்கு மேலும் ஆனால் 200 நாட்களுக்கும் குறைவாகவே பணிபுரிந்த ஊழியர்களுக்கு 195 ரூபாய், 200 நாட்களுக்கு மேலும் பணிபுரிந்த ஊழியர்களுக்கு 625 ரூபாய் வீதம் பொங்கல் பரிசாக சாதனை ஊக்கத் தொகை வழங்கிட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

இந்த உத்தரவின்படி போக்குவரத்து கழகங்களில் பணிபுரியும் ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 561 பணியாளர்களுக்கு மொத்தம் 7 கோடியே ஒரு லட்சம் ரூபாய் சாதனை ஊக்கத்தொகை வழங்கப்படும் என போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.

seithichurul

Trending

Exit mobile version