தமிழ்நாடு
அக்டோபர் 2ம் தேதி கிராம சபை கூட்டம்: தமிழக அரசு அனுமதி!
![gramha saba1 - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/09/gramha-saba1.jpg)
வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தில் கிராமசபை கூட்டம் நடத்த அனுமதிக்கப்படும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது.
ஒவ்வொரு ஆண்டும் காந்திஜெயந்தி, சுதந்திரதினம், குடியரசு தினம் உள்பட ஒருசில தினங்களில் கிராமசபை கூட்டம் நடைபெறும் என்பதும் இந்த கிராம சபை கூட்டத்தில் இயற்றப்படும் தீர்மானங்களுக்கு மிகப்பெரிய மதிப்பு உள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
அந்த வகையில் கிராம சபை கூட்டத்தில் முக்கியத்துவம் குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் அவர்கள் ஒவ்வொரு கிராமத்துக்கும் எடுத்துக் கூறியதை அடுத்தே இந்த கிராம சபை கூட்டம் பொதுமக்கள் மத்தியில் விழிப்புணர்வை ஏற்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் அதே நேரத்தில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு மேலாக கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டதை அடுத்து கிராம சபைக் கூட்டத்திற்கு அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. கடந்த ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் கூட கிராம சபை கூட்டம் நடத்த தடை என திமுக அரசு அறிவித்திருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. இதற்கு கமல் உள்பட பலர் கண்டனம் தெரிவித்து இருந்தனர்.
இந்த நிலையில் வரும் அக்டோபர் 2ஆம் தேதி காந்தி ஜெயந்தி தினத்தில் கிராமசபை கூட்டம் நடத்த தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. ஆனால் அதே நேரத்தில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன், கொரோனா வைரஸ் பாதுகாப்பு ஏற்பாடுகளை கிராம சபை கூட்டம் நடத்துபவர்கள் கடைபிடிக்க வேண்டும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ள 9 மாவட்டங்களில் கிராமசபை கூட்டங்கள் நடத்த கூடாது என்றும் அந்த ஒன்பது மாவட்டங்களை தவிர மற்ற மாவட்டங்களில் கிராமசபை கூட்டங்கள் நடத்த அனுமதிக்கப்படுவதாகவும் தமிழக அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது.