தமிழ்நாடு
யாருக்கெல்லாம் விவசாயக் கடன் தள்ளுபடி தெரியுமா?
தமிழக விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் வாங்கிய 12 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள கடனை தள்ளுபடி செய்வதாகச் சென்ற வாரம் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அறிவித்தார். இந்த அறிவிப்பால் 16 லட்சத்துக்கும் மேற்பட்ட விவசாயிகள் பயன் அடைவார்கள் என்றும் அவர் தெரிவித்தார்.
இந்நிலையில் இன்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி இந்த கடன் தள்ளுபடி பத்திரங்களைப் பயனாளிகளுக்கு அளித்துத் தொடங்கி வைத்தார். இந்த கடன் தள்ளுபடியை எப்படிப் பெறுவது என்று விவசாயிகளுக்குச் சந்தேகமும் உள்ளது.
எனவே கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் கிடைக்கும் என்று விளக்கமாக இங்குப் பார்க்கலாம். பொதுவாகக் கூட்டுறவு வங்கிகளில் விளை நிலங்களின் ஆதாரத்தைக் காண்பித்து, வங்கி அதிகாரிகளின் ஒப்புதல் பெற்ற பிறகு கடன் வழங்கப்படும், இந்த கடன் தள்ளுபடி செய்யப்படும் ஆனால் பட்டா, சிட்டா நகல்களைக் காண்பித்துக் குறைந்த வட்டிக்கும் நகைக் கடன்களை விவசாயிகள் பெற்றுள்ளனர். அவர்களுக்கு இந்த கடன் தள்ளுபடி கிடைக்குமா என்பது சந்தேகமாக உள்ளது.
இதுகுறித்து கூட்டுறவு வங்கிகளிடம் கேட்ட போது, பட்டா, சிட்டா அடங்கல் போன்றவற்றைப் பயிர்க் கடன் இல்லை. பயிர் கடன் என்பது விளைநிலங்களில் உள்ள பயிர்களுக்காக வழங்கப்படுகிறது. இதுதான் விவசாயக் கடன். நகையை அடைமானம் வைத்துப் பெறுவது விவசாயக் கடன் பிரிவில் வராது. விவசாயம் செய்வதற்காகப் பட்டா, சிட்ட, சிறு குறு விவசாயி சான்றுகள் கொடுத்து வேளாண்மை கடன் வாங்கும் போது அது விவசாயக் கடனாக எடுத்துக்கொள்ளப்படும்.
இதற்காக விவசாயிகள் விண்ணப்பிக்க வேண்டும் என்று இல்லை. குறிப்பிட்ட காலத்தில் கூட்டுறவு வங்கிகளில் விவசாயக் கடன் பெற்ற விவசாயிகளுக்கு நோட்டீஸ் அனுப்பி கடன் தள்ளுபடி குறித்துத் தெரிவிக்கப்படும். இந்த நோட்டீஸை விவசாயிகள் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும். அதுதான் அந்த கடன் தள்ளுபடி செய்யப்பட்டதற்காக ஆதாரம். பின்வரும் காலத்தில் கடன் தள்ளுபடி செய்வதற்கான நோட்டீஸ் இருந்தால் மட்டுமே வேறு ஏதேனும் பிரச்சனை வரும் போது சிக்கல் இருக்காது.