தமிழ்நாடு
நீட் தேர்வு தாக்கம் குறித்த குழு: சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு விளக்கம்
நீட் தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு செய்ய தமிழக அரசு கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏகே ராஜன் தலைமையிலான குழு ஒன்றை அமைத்தது. இந்த குழு மாணவர்கள் மத்தியில் நீட்தேர்வு தாக்கம் குறித்து ஆய்வு செய்து அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இந்தப் குழு ஏற்கனவே மூன்று கூட்டங்கள் நடத்தி ஆய்வு செய்தது என்பதும் நான்காவது கூட்டம் விரைவில் கூட்டம் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் நீட் தேர்வு என்பது உச்சநீதிமன்றத்தால் அனுமதிக்கப்பட்டு, பாராளுமன்றத்தில் ஒப்புதலோடு குடியரசுத்தலைவர் அமல்படுத்திய சட்டம் என்றும், அந்த சட்டத்திற்கு எதிராக ஒரு குழு அமைப்பது சட்டவிரோதம் என்றும் பாஜக சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் கரு நாகராஜன் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்றம் உச்ச நீதிமன்றத்திற்கு எதிராக தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ள கூடாது என்று அறிவுறுத்தியது. மேலும் இது குறித்து பதிலளிக்க வேண்டும் என தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளது.
இந்த நிலையில் தமிழக அரசு தற்போது இது குறித்து தனது விளக்கத்தை சென்னை உயர்நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது. நீட் பாதிப்பை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட குழுவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு ஜனநாயகத்தை ஒடுக்கும் முயற்சி என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு பதில் மனு தாக்கல் செய்துள்ளது. அரசு பள்ளி மாணவர்கள் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு நீட் தேர்வு பாதிப்பு ஏற்படுகிறதா என ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டதாகவும், மாநில அரசின் அதிகாரத்துக்கு உட்பட்டே நீதிபதி ஏகே ராஜன் தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது என்றும் தமிழக அரசு பதில் அளித்துள்ளது.
நீதிமன்றங்களின் உத்தரவுகளை மீறப்படவில்லை என்று விளக்கம் அளித்துள்ள தமிழக அரசு, ஏகே ராஜனின் குழு தரும் அறிக்கையை ஆராய்ந்த பிறகுதான் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளது. மேலும் கரு நாகராஜன் தொடர்ந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்றும், மாணவர்கள் அல்லது பெற்றோர் என்ற முறையில் இல்லாமல் விளம்பர நோக்கத்திற்காக பாஜகவின் கரூ நாகராஜன் இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளார் என்றும் தமிழக அரசு தனது பதில் மனுவில் தெரிவித்துள்ளது.