சினிமா
தியேட்டருக்கு 100 சதவீத இருக்கைக்கு அனுமதி – தமிழக அரசு அறிவிப்பு…
தமிழகத்தில் கடந்த மார்ச் மாதம் கொரோனா பாதிப்பு பரவ துவங்கியது. ஏப்ரல் மே மாதங்களில் அது இன்னும் அதிகரித்தது.
எனவே, தமிழக அரசு பல கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. ஊரடங்கு உத்தரவும் பிறப்பிக்கப்பட்டது. அதன்பின் கொரோனா படிப்படியாக குறைந்தது.
தினசரி கொரோனா பாதிப்பு 35 ஆயிரமாக இருந்த நிலையில், அது படிப்படியாக குறைந்து 2 ஆயிரத்திற்கும் கீழே சென்றது. ஆனாலும், தனியார் பார்கள் செயல்பட அனுமதி மறுப்பு, பேருந்துகளில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி, கேரள மாநிலத்திற்கு பேருந்து செல்ல அனுமதி மறுப்பு என சில கட்டுப்பாடுகள் அமூலில் இருந்தது.
குறிப்பாக, பல மாதங்களுக்கு பின் தியேட்டர்கள் திறக்கப்பட அனுமதிக்கப்பட்டாலும் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி இருந்தது. இது தயாரிப்பாளர்களுக்கு அதிருப்தியை கொடுத்தது. தற்போது தீபாவளிக்கு அண்ணாத்த, எனிமி போன்ற படங்கள் வெளியாகவுள்ள நிலையில் 50 சதவீத இருக்கைக்கு மட்டுமே அனுமதி என்றால் மல்டிபிளக்ஸ் போன்ற தியேட்டர்களில் லாபத்தை ஈட்ட நாட்கள் ஆகும் என கலக்கத்தில் இருந்தனர்.
இந்நிலையில், சில கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து தமிழக முதல்வர் ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். அதன்பின் சில முக்கிய அறிவிப்புகள் வெளியானது.
இதில் நவம்பர் 1ம் தேதி முதல் திரையங்குகள் 100 சதவீத இருக்கைகளுடன் இயங்கலாம் என அரசு கூறியுள்ளது. இது தயாரிப்பாளர்களுக்கும், திரையரங்க அதிபர்களுக்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.