தமிழ்நாடு
ஜல்லிக்கட்டு போட்டிகளை நடத்த புதிய விதிமுறைகள்..!- அரசு அறிவிப்பு
தமிழகத்தில் கொரோனா கட்டுப்பாடுகளுடன் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்திக் கொள்ளலாம் என சமீபத்தில் தமிழக அரசு அறிவித்திருந்தது.
இந்நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு ஏதுவாக சில விதிமுறைகளை தமிழக அரசு அறிவித்துள்ளது. மாடுபிடி வீரர்கள் போட்டி நடைபெறும் 7 நாட்களுக்கு முன்பாக, பதிவு செய்யப்பட்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வழங்கும் அடையாள அட்டை பெற்றிருக்க வேண்டும்; அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
பார்வையாளர்களுக்கான நெறிகாட்டல் விதிமுறைகளின் கீழ் தமிழக அரசினால் அறிவிக்கப்பட்டுள்ள கொரோனோ தடுப்பு நடைமுறைகளை பின்பற்றி பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்படும். ஆனால், விதிகளை மீறுபவர்கள் உடனடியாக வெளியேற்றப்படுவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாடுபிடி வீரர்கள் போட்டி நடைபெறும் 7 நாட்களுக்கு முன்பாகவே பதிவு செய்து மாவட்ட நிர்வாகத்தின் மூலம் வழங்கும் அடையாள அட்டையைப் பெற்றிருக்க வேண்டும். அவ்வாறு அடையாள அட்டை இல்லாதவர்களுக்கு அனுமதி இல்லை.
ஜல்லிக்கட்டு காளையுடன் வரும் உரிமையாளர் மற்றும் உதவியாளர் இருவரும் கொரோனோ பரிசோதனை செய்து கொரோனோ இல்லை என்ற உறுதி சான்று பெற்றிருக்க வேண்டும். இதனை சமர்பித்தப் பின்னர் மாவட்ட நிர்வாகம் சார்பில் அடையாள அட்டை வழங்கப்படும். ஜல்லிக்கட்டு காளைகளுடன் வழக்கமாக 5 முதல் 6 பேர் வரை வரும் நிலையில், இந்த ஆண்டு ஜல்லிக்கட்டு காளைகளுடன் காளை உரிமையாளர் மற்றும் ஒரு உதவியாளர் என இருவர் மட்டுமே வர வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.