தமிழ்நாடு
டெல்லி சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித்: பின்னணி என்ன?
அதிமுக ஆட்சி கவிழுமா, நீடிக்குமா என்று தமிழக அரசியலில் பரபரப்பான சூழல் நிலவி வரும் வேளையில் தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் நேற்று டெல்லிக்கு பயணம் மேற்கொண்டுள்ளது தமிழக அரசியலில் சந்தேக அலையை உருவாக்கியுள்ளது.
மத்தியில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்கப்பட்டதால் புதிய அமைச்சரவை அமைக்கப்பட்டது. இந்த நிலையில், புதிய உள்துறை அமைச்சராக அமித் ஷா பொறுப்பேற்றுள்ளார். இதனால் மாநில ஆளுநர்கள் புதிய உள்துறை அமைச்சரை சந்தித்து வாழ்த்து தெரிவித்து பரஸ்பர அறிமுகம் செய்வது நிர்வாக ரீதியிலான நடைமுறையாக இருந்து வருகிறது.
இதன்படி பல மாநில ஆளுநர்கள் டெல்லிக்கு சென்று புதிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். இதனையடுத்து நேற்று காலை டெல்லி சென்ற தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து ஆலோசனை நடத்தினார்.
இது வழக்கமான சந்திப்பு என்றாலும், தற்போது உள்ள அரசியல் சூழல் காரணமாக இந்த சந்திப்பில் பல ஆலோசனைகள் நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இதனையடுத்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பிரதமர் மோடியை சந்திக்க வாய்ப்பிருப்பதாகவும் பேசப்படுகிறது. மேலும் தமிழக ஆளுநரைப் போலவே மேற்கு வங்காளம், தெலங்கானா, ஆந்திரா, ஜார்க்கண்ட், அருணாசல் பிரதேசம் ஆகிய மாநிலங்களின் ஆளுநர்களும் உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்தனர்.