தமிழ்நாடு
‘ஜல்லிக்கட்டில் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை… பரிசீலிக்கும் தமிழக அரசு!
![jallikattu 2 (1) - Bhoomitoday](https://www.bhoomitoday.com/wp-content/uploads/2021/01/jallikattu-2-1.jpg)
ஜல்லிக்கட்டு போட்டிகளில் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை தர தமிழக அரசு பரிசீலனை செய்து வருவதாக அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.
ஆண்டுதோறும் மதுரை மாவட்டத்தில் மூன்று பகுதிகளில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடத்தப்படுவது வழக்கம். சில கொரோனா கட்டுப்பாடுகள் உடன் இந்த ஆண்டும் மதுரையில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் நடந்து வருகின்றன. நேற்று மதுரை அவனியாபுரத்திலும் இன்று பாலமேடு ஜல்லிக்கட்டுப் போட்டிகளும் நிறைவு பெற்றுள்ளன. நாளை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டுகள் நடைபெற உள்ளது.
இந்த சூழலில் இன்று பாலமேடு ஜல்லிக்கட்டு நிறைவு நேரத்தில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் செய்தியாளர்கள் மத்தியில் பேசினார். அவர் கூறுகையில், “ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் வெற்றி பெறும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசு வழங்க தமிழக அரசு பரிசீலனை செய்து வருகிறது. விரைவில் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி அறிவிப்பார்” என்றார்.
ஜல்லிக்கட்டுப் போட்டிகளில் வழக்கமாக வெற்றி பெறும் சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு வழக்கமாக வீட்டு உபயோகப் பொருட்கள், கார், பைக், சைக்கிள், கட்டில், குத்துவிளக்கு, தங்கக்காசு என வழங்கப்படுவது வழக்கம். நீண்ட காலமாகவே சிறந்த மாடுபிடி வீரர்களுக்கு அரசு வேலை வழங்கப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுப்பப்பட்டு வருகிறது குறிப்பிடத்தக்கது.