தமிழ்நாடு
மக்களைத் தேடி மருத்துவம்.. தொடங்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்!
நாட்டிலேயே முதன் முறையாக மக்களைத் தேடி மருத்துவம் என்ற திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் இன்று கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொடங்கி வைக்கிறார்.
கிருஷ்ணகிரி மாவட்டம் சூலகிரியை அடுத்த சாதனப்பள்ளியில் அமைந்துள்ள துணை சுகாதார நிலையத்தில், மக்களை தேடி மருத்துவம் திட்டத்தை ஆகஸ்ட் 5-ம் தேதி முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
தமிழ்நாடு முழுவதும் 20 லட்சம் பேர் அரசு மருத்துவமனைகளில் நீரிழிவு மற்றும் இரத்த அழுத்தத்துக்கான மருந்துகளை வாங்கி சாப்பிட்டு வருகின்றனர். கொரோனா ஊரடங்கு காலத்தில் பொது போக்குவரத்து முடங்கியதால் இவர்களால் சுகாதார நிலையங்களுக்குச் சென்று மத்திரை மருந்துகளைப் பெற்றுக்கொள்ள முடியவில்லை.
கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இறந்தவர்களில் 60 சதவீதத்திற்கும் அதிகமானவர்கள் நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் மற்றும் உடல் பருமனால் பாதிக்கப்பட்டவர்கள்தான்.
எனவே நீரிழிவு நோய், ரத்த அழுத்தம் மற்றும் பிற தொற்றா நோய் உள்ளவர்களின் வீடுகளைத் தேடிச் சென்று மாத்திரை மருந்து வழங்கும் திட்டமாக மக்களைத் தேடி மருத்துவம் திட்டத்தைத் தமிழக அரசு தொடங்கியுள்ளது.
இது தவிர முடக்குவாதம் உள்ளவர்களுக்கு வீடு தேடி சென்று பிசியோதெரபி, சிறுநீரகம் பாதிக்கப்பட்டவர்களுக்கு போர்டபிள் மெஷின் மூலம் வீடு தேடிச் சென்று டயாலிசிஸ் செய்யவும் திட்டமிட்டு வருவதாக அண்மையில் தமிழக மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.