இந்தியா
58 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் அமோக வெற்றி: மம்தாவுக்கு ஸ்டாலின் வாழ்த்து!
மேற்கு வங்காள மாநில முதல்வர் மம்தா பானர்ஜி அவர்கள் பவானிபூர் இடைத்தேர்தலில் போட்டியிட்ட நிலையில் அந்த தொகுதியில் அவர் 58 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் அமோக வெற்றி பெற்றதை அடுத்து தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவருக்கு வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார்.
கடந்த மே மாதம் மேற்கு வங்க மாநிலத்திற்கு சட்டமன்ற தேர்தல் நடைபெற்றபோது மம்தா பானர்ஜியின் திரிணாமுல் காங்கிரஸ் கட்சி அமோக வெற்றி பெற்று ஆட்சியை மீண்டும் பிடித்தது. ஆனால் அதே நேரத்தில் நந்திகிராம் தொகுதியில் போட்டியிட்ட மம்தா பானர்ஜி தோல்வி அடைந்ததை அடுத்து அவர் முதல்வர் பதவி ஏற்றாலும் ஆறு மாதத்திற்குள் மீண்டும் தேர்தலில் போட்டியிட்டு எம்எல்ஏ ஆக வேண்டும் என்ற நிலை ஏற்பட்டது.
இந்த நிலையில் சமீபத்தில் பவானிபூர் தொகுதியில் நடந்த இடைத்தேர்தலில் மம்தா பானர்ஜி போட்டியிட்டார். அவரை எதிர்த்து வலுவான போட்டியாளரை பாஜக நிறுத்தியபோதிலும் மம்தா பானர்ஜி வெற்றி பெறுவது உறுதி என அனைத்து கருத்துக் கணிப்புகளும் கூறியது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இன்று காலை 8 மணி முதல் வாக்குகள் எண்ணப்பட்ட நிலையில் ஆரம்பத்திலிருந்தே மம்தா பானர்ஜி முன்னிலையில் இருந்தார். சற்றுமுன்னர் இந்த தொகுதியின் முடிவு அறிவிக்கப்பட்ட நிலையில் 58 ஆயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இதனை அடுத்து மம்தா பானர்ஜி மீண்டும் முதல்வராக தொடர்வதில் எந்தவித சிக்கலும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் பவானிபூர் இடைத்தேர்தலில் உங்களின் அபார வெற்றிக்கு எனது வாழ்த்துக்கள் என்றும் மேற்கு வங்க மக்கள் உங்கள் மீது வைத்துள்ள மீள முடியாத நம்பிக்கையை இந்த வெற்றி மீண்டும் உறுதிப் படுத்துகிறது என்றும் தமிழக முதல்வர் முக ஸ்டாலின் அவர்கள் தனது வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.