தமிழ்நாடு
கொடநாடு விவகாரத்தில் முதல்வருக்கு தொடர்புள்ளதா? டிடிவி தினகரன் பரபர!
சென்னை: கொடநாடு விவகாரம் தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
கொடநாடு விவகாரம் தற்போது தமிழகத்தில் விஸ்வரூபம் எடுத்துள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன் தெகல்ஹா முன்னாள் ஆசிரியர் மேத்யூஸ் சாமுவேல் கொடநாடு எஸ்டேட்டில் நடைபெற்ற மர்ம மரணங்களுக்கு பின்னணியில் யார் உள்ளார்கள் என்பது குறித்த சில ஆவணங்களை வெளியிட்டார்.
அதில் இருந்து தொடங்கிய பரபரப்பு இப்போதுவரை முடியவில்லை. மேத்யூஸ் தமிழக முதல்வரை நேரடியாக குற்றஞ்சாட்டினார். இந்த நிலையில் கொடநாடு விவகாரம் தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கருத்து தெரிவித்துள்ளார்.
கொடநாடு விவகாரத்தில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் நடவடிக்கையை பார்க்கும் பொழுது அதில் அவருக்கு தொடர்பு இருக்கும்போல் தெரிகிறது. குற்றம் சாட்டியவர்களையே கைது நடவடிக்கை எடுத்திருப்பதும் சந்தேகம் அளிக்கிறது.
சென்னை ஹைகோர்ட் நீதிபதி கூட இவர்களை சிறைக்கு அனுப்ப வில்லை. இதற்கு காரணமானவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கூடிய காலம் விரைவில் வரும் அப்போது உண்மை தெரியவரும்.
எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் அமமுக கட்சி கூட்டணி வைத்து போட்டியிடும். இதற்காக சில மாநில கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம். அதில் உடன்பாடு ஏற்படாவிட்டால் அமமுக தனித்துப் போட்டியிடும்.