தமிழ்நாடு
காலை உணவு திட்டத்தால் பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு!
முதல்வரின் காலை உணவு திட்டம் தொடங்கப்பட்ட பிறகு பள்ளிக்கு வரும் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.
கோயம்புத்தூர் மாவட்டத்தில் செப்டம்பர் 16-ம் தேதி முதல் ஒன்றாம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரையில் படிக்கும் அரசு பள்ளி மாணவர்களுக்குக் காலையில் சிற்றுண்டி வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டது.
அதனை தொடர்ந்து ஆகஸ்ட் மாதம் 60 முதல் 65 சதவீதமாக இருந்த மாணவர்களின் வருகை பதிவு 90 சதவீதமாக அதிகரித்துள்ளதாகத் தரவுகள் கூறுகின்றன.
இது குறித்து தகவல் தெரிவித்துள்ள கோயம்புத்தூர் மாவட்ட மதிய உணவு கண்காணிப்பு அதிகாரி, காலை உணவு திட்டத்தால் மாணவர்கள் பள்ளிகளுக்கு வரும் எண்ணிக்கை 10 முதல் 30 சதவீதம் வரை அதிகரித்துள்ளது என தெரிவித்துள்ளார்.
தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் 1-ம் வகுப்பு முதல் 5-ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களுக்குத் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவின் பெயரில் காலையில் ரவா உப்புமா, சேமியா உப்புமா, அரிசி உப்புமா, கோதுமை ரவா உப்புமா, ரவா காய்கறி கிச்சடி, சேமியா காய்கறி கிச்சடி, சோள காய்கறி கிச்சடி, கோதுமை ரவா காய்கறி கிச்சடி, ரவா பொங்கல், வெண் பொங்கல், காய்கறி சாம்பார், ரவா கேசரி, சேமியா கேசரி ஆகிய உணவுகள் வழங்கப்பட்டு வருகின்றன.
உலகளாவிய பசி குறியீடு பட்டியலில் 101வது இடத்திலிருந்து 107வது இடத்திற்கு இந்தியா பின் தள்ளப்பட்டுள்ள நிலையில், தமிழக அரசின் இந்த திட்டத்தால் பள்ளி மாணவர்கள் வருகைப் பதிவு அதிகரித்துள்ளதாக வெளியாகியுள்ள செய்து ஆறுதலாக உள்ளது.