தமிழ்நாடு
நாளை கூடுகிறது தமிழக அமைச்சரவைக் கூட்டம்
இன்னும் ஒரு சில மாதங்களில் தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், நாளை தமிழக அமைச்சரவைக் கூட்டம் கூடுகிறது. இந்தக் கூட்டமானது தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெறும். நாளை மாலை 4:30 மணி அளவில் இந்தக் கூட்டம் தலைமைச் செயலகத்தில் நடைபெற உள்ளது. இதைத் தொடர்ந்து வரும் பிப்ரவரி 2 ஆம் தேதி ஆண்டின் முதல் சட்டப்பேரவைக் கூட்டத் தொடரும் கூட இருக்கிறது. இதுவே தற்போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடந்து வரும் ஆட்சியின் கடைசி சட்டசபைக் கூட்டமாக இருக்கும்.
இது 2021 ஆண்டின் முதல் சட்டசபைக் கூட்டத் தொடர் என்பதால், தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தின் உரையுடன் ஆரம்பிக்கும். ஆளுநர் உரையில் என்னென்ன அம்சங்கள் இடம் பெற வேண்டும் என்பது குறித்து நாளைய கூட்டத்தில் விவாதிக்கப்படலாம்.
மேலும் அரசின் புதிய திட்டங்கள் மற்றும் அறிவிப்புகள் பற்றியும் நாளை நடக்க இருக்கும் அமைச்சரவைக் கூட்டத்தில் ஆலோசிக்கப்படும் என்று தகவல் சொல்லப்படுகிறது. அதேபோல துறை ரீதியாக இருக்கும் விவகாரங்கள் குறித்தும் விவாதிக்கப்பட்டு, அதற்குரிய புதிய அறிவிப்புகள் வெளியாகலாம்.
சட்டப்பேரவைப் பொதுத் தேர்தல் வரவிருக்கும் நிலையில், சில கவர்ச்சிகரமான அறிவிப்புகளை அதிமுக அரசு வெளியிடலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.