தமிழ்நாடு
மேகதாது அணை விவகாரம்: தமிழக சட்டசபை தீர்மானம் பிரதமருக்கு அனுப்பி வைப்பு!
காவிரியின் குறுக்கே மேகதாதுவில் கர்நாடக அரசு அணை கட்ட உள்ள திட்டத்துக்கு எதிராக தமிழக சட்டப்பேரவை சிறப்புக்கூட்டம் நேற்று மாலை நடைபெற்றது. இதில் மேகதாது அணைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் பிரதமர் மோடிக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
மேகதாதுவில் கர்நாடகா அரசு அணை கட்டுவதற்கான வரைவு அறிக்கைக்கு மத்திய அரசு சமீபத்தில் அனுமதி வழங்கியிருந்தது. இதற்கு காவிரி மேலாண்மை வாரியமும் எதிர்ப்பு தெரிவித்திருந்தது. இந்நிலையில் இந்த மேகதாது அணை கட்டுவதற்கு தமிழக அரசியல் கட்சிகள் கடும் எதிர்ப்பையும், கண்டனத்தையும் பதிவு செய்து வருகிறது.
இந்நிலையில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக முடிவெடுக்க நேற்று மாலை தமிழக சட்டப் பேரவை சிறப்புக் கூட்டம் நடைபெற்றது. இதில் மேகதாதுவில் அணை கட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேலும் தமிழ்நாட்டின் சம்மதம் இன்றி எந்த கட்டுமானப் பணியையும் கர்நாடக அரசு மேகதாதுவில் மேற்கொள்ளக் கூடாது என உத்தரவிட வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதனையடுத்து முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மேகதாது அணை குறித்து பிரதமர் மோடிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதனுடன் தமிழக சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நகலும் அனுப்பப்பட்டுள்ளது. மேலும் அணைகட்ட ஆய்வு மேற்கொள்ள கர்நாடக அரசுக்கு வழங்கிய அனுமதியை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும் எனவும் வலியுறுத்தப்பட்டுள்ளது.