இந்தியா
பெகாசஸ் விவகாரம்- மத்திய அமைச்சரின் ஆவணங்களை பிடுங்கி கிழித்த திரிணாமூல் எம்.பி!
மாநிலங்களவையில் இன்று பெகாசஸ் உளவு விவகாரத்தில் பேச எழுந்த மத்திய அமைச்சரின் ஆவணங்களை பிடுங்கி கிழித்து எறிந்துள்ளார் திரிணாமூல் காங்கிரஸ் எம்.பி சாந்தனு சென்.
நாடாளுமன்றம் குளிர்காலக் கூட்டத்தொடர் தொடங்கியதில் இருந்தே தினமும் பெகாசஸ் உளவு விவகாரத்தால் எதிர்கட்சிகள் விவாதங்களை எழுப்பி வருகின்றனர். இந்த சூழலில் இன்று பெகாசஸ் உளவு விவகாரம் குறித்து மாநிலங்களவையில் மத்திய தகவல் தொழில்நுட்ப அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் தனது ஆவணங்கள் உடன் பேச எழுந்தார்.
அப்போது திடீரென திரிணாமூல் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த எம்.பி சாந்தனு சென் வேகமாக அமைச்சரை நோக்கிச் சென்று அந்த ஆவணங்களைப் பிடுங்கி துணைத்தலைவர் ஹரிவன்ஷ் நாரயண் சிங் நோக்கி எறிந்தார். இதனால் சபையில் அமளி ஏற்பட்டது. காலையில் இருந்து அவை ஏற்கெனவே இரண்டு முறை அமளியால் ஒத்திவைக்கப்பட்டது.
திரிணாமூல் எம்.பி-யின் செயலுக்குப் பின்னர் ஒரே நாளில் மூன்றாவது முறையாக அவை ஒத்திவைக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. போதிய விளக்கம் கொடுக்காமல் ஒற்றை பக்கத்தில் மத்திய அமைச்சர் அறிக்கை வாசிப்பது என்பது இந்த விவகாரத்தை கேலி செய்வதாக மட்டுமே தெரிகிறது என எதிர்கட்சிகள் அமளியில் ஈடுபட்டனர்.