இந்தியா
மோடி ஒரு விஞ்ஞானி: தேர்தல் விதிகள் விஞ்ஞானிகளை கட்டுப்படுத்தாது!
பிரதமர் மோடி நேற்று நாட்டு மக்களிடையே ஆற்றிய உரை கடுமையான விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது. தேர்தல் ஆதாயத்துக்காகவே மோடி இந்த உரைய ஆற்றினார் என பரவலாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
நாடு முழுவதும் தேர்தல் நடத்தை விதி அமலில் உள்ளது. இந்த சூழலில் பிரதமர் மோடி இன்னும் சற்று நேரத்தில் நாட்டு மக்களிடையே உரையாற்ற உள்ளார், அப்போது ஒரு முக்கியமான செய்தியை சொல்ல உள்ளார் என்ற தகவல் நேற்று வெளியானது. ஒட்டு மொத்த நாடும் உடனடியாக உஷார் ஆனது. ஏதோ ஒரு அறிவிப்பு வரப்போகிறது என்ற அச்சத்தில் இருந்தனர்.
காரணம் தேர்தல் நடத்தை விதி அமலுக்கு வந்த பின்னர் எந்த பிரதமரும் இதற்கு முன்னர் ஊடகத்தின் மூலம் நாட்டு மக்களிடையே உரையாற்றியதில்லை. இதுவே முதல்முறை என்பதால் பதற்றம் தொற்றிக்கொண்டது. ஆனால் சிறிது நேரத்தில் உரையாற்றிய பிரதமர் மோடி வின்வெளியில் டிஆர்டிஓ நிகழ்த்திய சாதனையை தனது சாதனையாக பெருமிதம் கொண்டார்.
விஞ்ஞானிகள் நிகழ்த்திய இந்த சாதனையை விஞ்ஞானிகளே அறிவித்திருக்கலாம் ஆனால் அதனை தனது சாதனையாக தேர்தல் விதி அமலில் இருக்கும் போது மோடி அறிவிக்க வேண்டிய அவசியமில்லை. தேர்தல் பிரச்சாரமாக இதனை மோடி மாற்றியுள்ளார் என தேர்தல் ஆணையத்தில் எதிர் கட்சிகள் புகார் அளித்துள்ளன.
மோடியின் இந்த செயல் நாடு முழுவதும் கண்டனத்துக்கு உள்ளாகி உள்ளது. இந்நிலையில் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினர் டிகே.ரங்கராஜன் பிரதமர் மோடியை விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டின் உடன் ஒப்பிட்டு கலாய்க்கும் விதமாக தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில் மோடி ஒரு விஞ்ஞானி. அவர் டிஆர்டிஓ சாதனைகளை பாராட்டி வாழ்த்தி பேசியபோது அவர் பிரதமர் இல்லை. தேர்தல் விதிகள் விஞ்ஞானியை கட்டுப்படுத்தாது என கூறியுள்ளார். மேலும் மோடியின் புகைப்படத்தை ஆல்பர்ட் ஐன்ஸ்டின் போல சித்தரித்து அதன் கீழே ஆல்பெர்ட் மோடி என குறிப்பிட்டுள்ளார்.