தமிழ்நாடு
3 மாநில வனத்துறை அதிகாரிகள், 9வது நாளாக தேடுதல் வேட்டை: அகப்படாத T-23 புலி!
கூடலூர் அருகே உள்ள காட்டில் மறைந்திருக்கும் ஆட்கொல்லி புலியை பிடிக்க மூன்று மாநில வனத்துறை அதிகாரிகள் 9 நாட்களாக தேடி வரும் நிலையில் இன்னும் அந்த புலி பிடிபடாமல் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கடந்த சில நாட்களாக T-23என்று அழைக்கப்படும் புலி ஒன்று கால்நடைகள் மற்றும் மனிதர்களை வேட்டையாடி வரும் நிலையில் அந்த புலியை படிப்பதற்காக தமிழகம் கேரளா மற்றும் கர்நாடகா ஆகிய மூன்று மாநிலங்களைச் சேர்ந்த சுமார் 75 வனத்துறை அதிகாரிகள் தீவிர முயற்சி செய்து வருகின்றனர்.
புலி நடமாட்டம் காரணமாக கூடலூர் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். இந் நிலையில் அந்த புலியை பிடிப்பதில் தொடர்ச்சியாக வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. பல்வேறு இடங்களில் கூண்டுகளை வைத்தும் மயக்க ஊசி போட்டும் அந்த புலியை பிடிக்க முயற்சித்து வருகின்றனர். மேலும் ட்ரோன் மூலமும் புலியை தேடும் பணியும் நடந்து வருகிறது என்பதும் சிப்பிபாறை நாய் மூலமும் புலியை தேடும் பணி நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் இதுவரை நான்கு மனிதர்கள் மற்றும் 30க்கும் மேற்பட்ட கால்நடைகளை கொன்று குவித்து உள்ள ஆட்கொல்லி புலியை சுட்டுக்கொல்ல தமிழ்நாடு முதன்மை வனத்துறை அதிகாரி உத்தரவிட்டதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளன. புலியின் நடமாட்டத்தை தொடர்ந்து கண்காணித்து வரும் வனத்துறையினர் இன்று அல்லது நாளைக்குள் பிடித்து விடுவார்கள் என்றும் எதிர்பார்க்கப்பட்டு வருகிறது.
புலி நடமாட்டம் காரணமாக சிங்கார, மசினகுடி போன்ற பகுதிகளில் உள்ள மக்கள் வீடுகளை விட்டு வெளியே வரவேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இந்த நிலையில் புலியை சுட்டுக் கொல்வதற்கு கமல்ஹாசன் அவர்கள் தனது எதிர்ப்பை தெரிவித்து உள்ளார். பொதுமக்களின் பாதுகாப்பு முக்கியம் என்றாலும் அதிநவீன தொழில்நுட்பம் மூலம் புலியை உயிருடன் பிடிக்க வேண்டுமென அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.