இந்தியா
3 வேளாண் சட்ட ரத்து மசோதா நிறைவேற்றம்! விவசாயிகள் மகிழ்ச்சி!
இன்று பாராளுமன்றத்தில் 3 வேளாண்மை சட்டங்கள் ரத்து செய்யப்படும் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளதாக சற்றுமுன் தகவல் வெளிவந்ததை அடுத்து விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கடந்த சில மாதங்களுக்கு முன்னர் மத்திய அரசு 3 புதிய வேளாண் மசோதாக்களை இயற்றியது. இந்த சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் ஒரு ஆண்டாக போராட்டம் நடத்தி வந்தனர் என்பதும் இந்த போராட்டத்தின் காரணமாகவும் பஞ்சாப் மாநிலத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் வரவிருக்கும் காரணமாகவும் சமீபத்தில் இந்த மூன்று வேளாண் சட்டங்களையும் திரும்பப் பெறுவதாக பிரதமர் மோடி அறிவித்திருந்தார்.
இந்த நிலையில் இன்று பாராளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் தொடங்கிய நிலையில் முதல் நடவடிக்கையாக 3 வேளாண்மை சட்டங்களை ரத்து செய்யும் மசோதா மக்களவையில் தாக்கல் செய்யப்படும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் விவசாயத்துறை அமைச்சர் நரேந்திர சிங் தோமர் அவர்கள் சற்று முன் மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதற்கான மசோதாவை மக்களவையில் தாக்கல் செய்தார். இந்த மசோதாவை ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யும் மசோதா குறித்து விவாதிக்க வேண்டும் என்று காங்கிரஸ் கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மூன்று வேளாண் சட்டங்கள் ரத்து செய்யப்பட்டதாக தகவல் வெளியானதை அடுத்து பஞ்சாப் உள்பட ஒருசில வடமாநில விவசாயிகள் தங்களது மகிழ்ச்சியை தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.