தமிழ்நாடு
நாளையுடன் முடிகிறது 3 மாத கெடு: ஸ்டெர்லைட் தொடர்ந்து இயங்க அனுமதிக்கப்படுமா?
தூத்துக்குடியில் இயங்கிவந்த ஸ்டெர்லைட் ஆலை அந்த பகுதியில் மாசு ஏற்படுத்தியதன் காரணமாக தமிழக அரசு உத்தரவு பிறப்பித்து மூடியது என்பது தெரிந்ததே. இந்த ஆலையை மூட வேண்டும் என அந்த பகுதியில் உள்ள பொதுமக்கள் மாதக் கணக்கில் போராட்டம் நடத்தியதன் காரணமாக தமிழக அரசு இந்த உத்தரவை பிறப்பித்தது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் கடந்த ஆண்டு கொரோனா வைரஸ் பாதிப்பு மிகப்பெரிய அளவில் ஆக்சிஜன் பற்றாக்குறை இருந்ததை அடுத்து ஆக்சிஜனை உற்பத்தி செய்து கொடுக்க தயார் என ஸ்டெர்லைட் நிர்வாகம் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்தது.
இந்த நிலையில் ஸ்டெர்லைட் ஆலையை 3 மாதங்களுக்கு மட்டும் திறக்க சுப்ரீம் கோர்ட்டு அனுமதித்தது. இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட் அளித்த மூன்று மாத கால அவகாசம் நாளையுடன் முடிவடைகிறது. இதனையடுத்து ஸ்டெர்லைட் ஆலை மேலும் இயங்க தொடர்ந்து அனுமதிக்கப்படுமா? அல்லது மூன்று மாத காலக்கெடு முடிந்த உடன் இழுத்து மூடப்படுமா? என்ற கேள்வி எழுந்தது.
இந்த நிலையில் சற்று முன் வெளியான தகவலின்படி தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் ஆக்சிஜன் தயாரிப்புக்காக தொடர்ந்து இயங்க அனுமதிக்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் ஸ்டெர்லைட் ஆலை சார்பில் முறையீடு செய்யப்பட்டது. இந்த முறையீட்டு மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.
ஆனால் இதுகுறித்து தமிழக அரசு கூறிய போது தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலை தொடர்ந்து இயங்க அனுமதிக்க முடியாது என தெரிவித்துள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. ஸ்டெர்லைட் ஆலையின் முறையீட்டு மனுவுக்கு உச்ச நீதிமன்றம் என்ன தீர்ப்பு அளிக்க போகிறது என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.